உக்ரைன் மீது ரஷ்ய நடத்தி வரும் தாக்குதலைக் கண்டித்து, பூனைகளுக்கான சர்வதேச கூட்டமைப்பு ரஷ்ய பூனைகளை கொண்டு செல்வதற்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி ரஷ்யா உக்ரைன் மீது தொடர்ந்து 8வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் கார்கிவ் நகரில் ரஷியா ஆயுதம் ஏந்திய வாகனங்கள் மற்றும் பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனால் உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகள், குடியிருப்பு பகுதிகள் அழிந்து வருகின்றன. மேலும் பெரும் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. அதே நேரத்தில் உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன.
இந்நிலையில், உக்ரைன் மீது ரஷ்ய நடத்தி வரும் தாக்குதலைக் கண்டித்து, பூனைகளுக்கான சர்வதேச கூட்டமைப்பு ரஷ்ய பூனைகளை கொண்டு செல்வதற்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இது குறித்து சர்வதேச பூனைகள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், உக்ரைன் குடியரசு மீது ரஷ்ய கூட்டமைப்பு ராணுவம் படையெடுப்பு நடத்தி, தொடங்கியுள்ள போரால் அதிர்ச்சி அடைந்தோம். இந்த போரால், ஒன்றுமறியாத பல மக்கள் உயிரிழந்து உள்ளனர். பலர் காயமடைந்து உள்ளனர். லட்சக்கணக்கான உக்ரைனியர்கள் வீடுகளை விட்டு தங்களை காத்து கொள்ள வேறு இடங்களுக்கு தப்பியோடி உள்ளனர்.
இந்த போரால் ஏற்பட்டு உள்ள அழிவு மற்றும் குழப்பங்களை நாம் அனைவரும் காண்கிறோம். இந்த வன்முறைகளை கண்டுகொண்டு பேசாமல் இருந்து விட முடியாது. அதனால், மார்ச் 1ஆம் தேதியில் இருந்து, ரஷ்யாவில் உள்ள பூனை இனங்கள் எதனையும் இறக்குமதி செய்யவோ மற்றும் ரஷ்யாவுக்கு வெளியே எங்களது அமைப்பில் பதிவு செய்யவோ முடியாது.
இந்த கட்டுப்பாடுகள் வருகிற மே 31 ஆம் தேதி வரை அமலில் இருக்கும். தேவையானபோது, இந்த முடிவு மறுஆய்வு செய்யப்படும். உக்ரைனில் நடப்பு சூழ்நிலையால் பாதிக்கப்பட்டு உள்ள பூனை இனங்களை பாதுகாக்க குறிப்பிட்ட ஒரு தொகையை ஒதுக்கவும் முடிவு செய்துள்ளோம், என அதில் குறிப்பிட்டுள்ளனர்.