CISF அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி திமுக எம்.பி கடிதம்..! நாடாளுமன்ற வளாகத்தில் நடந்தது..?
நாடாளுமன்ற வளாகத்திற்கு சென்ற திமுக மாநிலங்களவை உறுப்பினர் அப்துல்லாவை பாதுகாவலர்களால் தடுத்து நிறுத்தியதாக சொல்லப்படுகிறது. தன்னை தடுத்து நிறுத்தி அவமதித்த சிஐஎஸ்எப் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாநிலங்களவைத் தலைவரும் குடியரசு துணை தலைவருமான ஜெகதீப் தன்கருக்கு திமுக எம்.பி அப்துல்லா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
கடிதத்தில் கூறியதாவது, நேற்று பிற்பகல் 2:30 மணியளவில் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தபோது, அங்கு பணியில் இருந்த சிஐஎஸ்எப் அதிகாரிகள் தன்னை தடுத்து நிறுத்தி நாடாளுமன்றத்துக்கு தான் வந்ததன் நோக்கம் என்ன என்பது குறித்து கூறினால் மட்டுமே, தன்னை உள்ளே அனுமதிக்க முடியும் என பணியில் இருந்த CISF பாதுகாவலர்கள் கட்டாயப்படுத்தியதாக கூறியுள்ளார்.
மேலும், “தமிழ்நாடு மக்கள் மற்றும் மாநில அரசின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்தில் உள்ள ஒருவரிடம், CISF பாதுகாவலர்களின் இந்த நடத்தையால் தவறு ஏற்பட்டுள்ளதாகவும். நாடாளுமன்ற வளாகத்தில் நாடாளுமன்ற பாதுகாவலர்கள் பாதுகாப்புப் பணியில் இருந்தபோது இதுபோன்ற தவறான நடத்தை இதற்கு முன்பு நடந்ததில்லை.
ஆனால் புதியதாக நியமிக்கப்பட்டுள்ள CISF பாதுகாவலர்களின் செயல்பாடுகள் மிகுந்த வருத்ததை அளிக்கிறது ”என்றும் அவர் கூறியுள்ளார்.
தன்னிடம் ஒழுங்கினமாக நடந்து கொண்ட சிஐஎஸ்எப் அதிகாரிகள் மற்றும் தவறிழைத்த அதிகாரிகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மாநிலங்களவை உறுப்பினர்களின் கண்ணியத்தையும் உறுதி செய்யவேண்டும் என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
– லோகேஸ்வரி.வெ