தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், ஆஸ்கார் விருது பெற்ற *The Flephant Whisperers’ ஆவணப் படத்தில் இடம் பெற்ற பொம்மன், பெல்லி தம்பதியர்களை பாராட்டி தலா ஒரு இலட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், முதுமலை யானைகள் வளர்ப்பு முகாமில் எடுக்கப்பட்ட ஆஸ்கார் விருது பெற்ற The Elephant Whisperers’ ஆவணப் படம் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்ததோடு, ஆஸ்கர் விருதையும் பெற்றுள்ளது. இந்த ஆவணப் படத்தின் மூலம் தமிழ்நாடு வனத்துறையின் செயல்பாடு மற்றும் யானைகள் பராமரிப்பு முறை உலக அளவில் கவனம் பெற்றது. தமிழ்நாட்டில் உள்ள இரண்டு யானைகள் முகாம்களான முதுமலையில் உள்ள தெப்பக்காடு மற்றும் ஆனைமலையில் உள்ள கோழிகமுத்தி யானைகள் முகாமில் மொத்தம் 91 பணியாளர்கள் பணி புரிந்து வருகிறார்கள்.
இந்த படத்தில் இடம் பெற்ற ரகு மற்றும் பொம்மி ஆகிய யானைகளின் பராமரிப்பாளர்களான பொம்மன், பெல்லி தம்பதியரை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் சந்தித்தார். இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து, பாராட்டுக் கேடயமும், பொன்னாடையும் அணிவித்து தலா ஒரு இலட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் கெளரவித்தார்.
மேலும், யானை பராமரிப்பாளர்களாகிய இவர்கள் வசிக்கத் தேவையான சுற்றுச்சூழலுக்கு இசைந்த. அவர்கள் பண்பாட்டிற்கு உகந்த வீடுகள் கட்ட ரூபாய் 9.10 கோடி நிதி உதவியை அரசு வழங்கும் எனவும் அறிவித்துள்ளார்கள். ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள யானைகள் முகாமை ரூபாய் 5 கோடி செலவில் மேம்படுத்தவும் அரசு அறிவித்துள்ளது.
கோவை மாவட்டத்தில், சாடிவயல் பகுதியில், யானைகள் பராமரிக்கத் தேவையான தங்கும் இடங்கள் மற்றும் அடிப்படை வசதிகளுடன் ஒரு புதிய யானைகள் முகாம் ரூபாய் 8 கோடி செலவில் அமைக்கப்படும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் 2022-ஆம் ஆண்டு உதகை பயணத்தின் போது முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமில் “அதிநவீன யானைகள் பாதுகாப்பு மையம் மற்றும் சுற்றுச்சூழல் வளாகம்” ஒன்றும்
ஏற்படுத்தப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தார்கள். இது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு பணிகள் முன்னெடுக்கப்படும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இத்தருணத்தில் அறிவித்துள்ளார்.