தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கள ஆய்வில் முதலமைச்சர் என்ற புதிய திட்டத்தைத் தொடங்கி வைத்து,முதற்கட்டமாக பிப்ரவரி 1 மற்றும் 2 ஆகிய நாட்களில் வேலூர் மண்டலத்தில் சுற்றுப் பயணம் செய்ய உள்ளதாக தமிழ்நாடு அரசின் தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கள ஆய்வில் முதலமைச்சர் என்ற புதிய திட்டத்தினை அறிமுகப்படுத்தி, அதன் மூலம் முதலமைச்சர், முக்கிய அமைச்சர்கள், அரசுத் துறை செயலாளர்கள் மற்றும் துறைத் தலைவர்கள் ஆகியோருடன் மாவட்டங்களுக்குச் சென்று நிர்வாகப் பணிகளையும், வளர்ச்சி மற்றும் நலத்திட்டப் பணிகளையும், மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 1 மற்றும் 2 ஆகிய இரண்டு நாட்களில் வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்கள் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விரிவாக ஆய்வு மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த ஆய்வின் போது, குடிநீர் சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், மற்றும் முக்கிய துறைசார்ந்த திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் அவற்றின் பயன்கள் பொதுமக்களுக்கு முழுமையாகச் சென்றடைகிறதா என்பது குறித்தும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்யவுள்ளதாகவும் தமிழ்நாடு அரசின் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post