“லைக்ஸ்காக எதை வேணாலும் பேசலாமா..? சாட்டை துரை முருகனை விளாசியா நீதிமன்றம்..!
Youtube-ல் பணமும், லைக்ஸும் கிடைக்கிறது என்பதற்காக எப்படியும் பேசலாமா என சாட்டை துரைமுருகனுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
கைது செய்ய காரணம் :
மறைந்த தமிழகத்தின் முன்னால் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் நடிகையும் பாஜகவின் மகளிர் அணி பொறுப்பாளர் குஷ்பூவை வைத்து அவதூறாக பேசி சர்ச்சையை கிளப்பியதற்காக கடந்த 2021ம் ஆண்டு சாட்டை துரைமுருகன் தஞ்சாவூர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அதன் பின் இனி எந்த தலைவர்கள் பற்றியும் அவதூறாக பேசக்கூடாது என நீதிபதி உத்தரவிட்ட பின்னரே ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
அதன் பின் கன்னியகுமரியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பற்றி அவதூறாக பேசி மீண்டும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்..
விக்கிரவாண்டி தேர்தல் பிரச்சாரம் :
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரையின்போது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சாட்டை துரைமுருகன் பேசும்போது பட்டியலினத்தை அவமதிக்கும் வகையில் பேசியதாகத் தெரிகிறது. அதையடுத்து அவர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் சாட்டை துரைமுருகன் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சாட்டை துரைமுருகனுக்கு ஜாமின் வழங்க அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
நீதிமன்றம் தீர்ப்பு :
அப்போது, சர்ச்சைக்குரிய வகையில் பேசி youtube இல் பதிவேற்றம் செய்தால் பணமும், பார்வையாளர்களும் கிடைக்கிறார்கள் என்பதற்காக எப்படியும் பேசலாமா? என நீதிபதி சரமாரியாக கேள்விகளை முன்வைத்தார்.
இனிமேல் சர்ச்சைக்குரிய வகையில் அவதூறான கருத்துக்களை தெரிவிக்க மாட்டேன் என சாட்டை துரை முருகன் தரப்பில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது