பாஜக வேட்பாளர் தேவநாதன் யாதவுக்கு சொந்தமான சொத்துக்கள் முடக்கம்..!! விசாரணையில் வெளிவந்த பல அதிர்ச்சி தகவல்கள்..!!
சென்னை மயிலாப்பூர் தெற்கு மாடவீதியில் 150 ஆண்டுகள் பழமையான “தி மயிலாப்பூர் இந்து பெர்மனன்ட் ஃபண்ட் லிமிடெட்” என்ற பெயரில் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிதி நிறுவனத்தில் நிரந்தர வைப்புத் தொகை உள்ள உறுப்பினர்களாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர். பெரும்பாலும் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் மற்றும்
சென்னை மயிலாப்பூர் தெற்கு மாடவீதியில் 150 ஆண்டுகள் பழமையான “தி மயிலாப்பூர் இந்து பெர்மனன்ட் ஃபண்ட் லிமிடெட்” என்ற பெயரில் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிதி நிறுவனத்தில் நிரந்தர வைப்புத் தொகை உள்ள உறுப்பினர்களாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர். பெரும்பாலும் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் மற்றும் முதியவர்கள் தங்களது ஓய்வூதிய பணத்தை அதிகளவில் இதில் முதலீடு செய்துள்ளனர். முதலீடு செய்யும் பணத்துக்கு அதிக வட்டி தருவதாக இந்த நிதி நிறுவனம் உறுதி அளித்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களின் சுமார் ரூ.525 கோடியை திருப்பிக் கொடுக்க மறுப்பதாக பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் குற்றம்சாட்டினர். குறிப்பாக, வாடிக்கையாளர்களுக்கு வட்டித் தொகையும், முதிர்வுத் தொகையும் வரவில்லை என்ற புகார் எழுந்தது. மேலும், 150-க்கும் மேற்பட்டோருக்கு வழங்கிய காசோலை பணம் இல்லாமல் திரும்பியதால் சம்பந்தப்பட்ட முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மயிலாப்பூரில் உள்ள நிதி நிறுவன அலுவலகத்தில் அவ்வப்போது திரண்டு முறையிட்டு வந்தனர்.
இந்நிலையில், பாதிப்புக்குள்ளான 144 முதலீட்டாளர்கள் தங்களிடம் ரூ.24.5 கோடி பணத்தை பெற்று மோசடி செய்துவிட்டதாக சென்னை அசோக் நகரில் உள்ள தமிழக காவல் துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவில் புகார் தெரிவித்தனர். அதன்படி அப்பிரிவு போலீஸார் கடந்த 12-ம் தேதி வழக்குப் பதிவு செய்தனர். இதன் தொடர்ச்சியாக செவ்வாய்க்கிழமை, தி மயிலாப்பூர் இந்து பெர்மனன்ட் ஃபண்ட் லிமிடெட் நிதி நிறுவன நிர்வாக இயக்குநர் தேவநாதன் யாதவ் புதுக்கோட்டையில் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் விசாரணைக்காக சென்னை அழைத்து வரப்பட்டார்.
அதன் தொடர்ச்சியாக இந்த வழக்கு விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நிதி நிறுவன இயக்குநர்கள் குணசீலன் புதுக்கோட்டையிலும், மகிமை நாதன் சென்னையில் நேற்று அதிகாலை கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில்..
நிதிநிறுவனத்தின் கட்டிடத்தின் ரகசிய அறையில் வைக்கப்பட்டிருந்த 300 கிலோ தங்க கட்டிகள் தேவநாதன் யாதவ் தனது கட்டுப்பாட்டில் கொண்டு சென்றதாகவும், அதன் பிறகு 300 கிலோ தங்கம் குறித்து எந்த தகவலும் அவர் நிதி நிறுவனத்தின் நிர்வாக குழு கூட்டத்தில் கூட தெரிவிக்கவில்லை என்று பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் படி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவிடம் 300 கிலோ தங்கம் குறித்து விசாரணை நடத்தினர்.ஆனால் அவர் சரியாக பதில் அளிக்காததால், 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர். அதேநேரம் நிதி நிறுவன மோசடி தொடர்பாக சட்ட விதிகளின் படி, மோசடியில் ஈடுபட்ட நபர்களின் சொத்துக்கள் மற்றும் வங்கி கணக்குகள் முடக்கப்படுவது வழக்கம். அதன்படி தேவநாதன் யாதவ் வங்கி கணக்குகள் மற்றும் சொத்துக்களை முடக்க பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதற்காக அவரது சொத்து குறித்து பட்டியலை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் எடுத்து வருகின்றனர். குறிப்பாக நிதி நிறுவனத்தில் நிர்வாக இயக்குநராக பதவியேற்ற 2017ம் ஆண்டுக்கு பிறகு அவர் வாங்கி குவித்த சொத்துக்கள் முழுவதையும் கணக்கில் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிள்ளது. சில மாதங்களுக்கு முன்பு ரூ.2.50 கோடி மதிப்புள்ள சொகுசு கார் ஒன்றை தேவநாதன் யாதவ் வாங்கி உள்ளார். அந்த கார் யார் பெயரில் வாங்கப்பட்டது. அதற்கான பணம் எங்கிருந்து வந்தது தொடர்பாகவும் தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.