தமிழகத்திற்க்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…
டிசம்பர் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் தமிழகத்திற்க்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதையடுத்து பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம், சென்னை அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழையும், திருவள்ளூர், புதுச்சேரி, பொன்னேரி உள்ளிட்ட இடங்களில் மிதமான மழையும் பெய்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விட்டு விட்டு பெய்து வரும் கனமழை காரணமாக 27 விமானங்கள் தாமதமானது.
செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரிப்பதால், வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு விநாடிக்கு ஆயிரத்து 500 கன அடியாக அதிகரித்துள்ளது.
இதனால், செம்பரம்பாக்கம் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல், புழல் ஏரியில் இருந்து 200 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
அடையாறு கரையோர மக்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
திருப்பத்தூர் அடுத்த கந்திலி, கெஜல்நாயக்கன்பட்டி, பள்ளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மலையோர பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால், களியலில் தலா 21 மிமீ மழை பெய்துள்ளது.
மதுரை, திருநெல்வேலி, கள்ளக்குறிச்சி மாவட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன், தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என தெரிவித்துள்ளார்.
நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற பின், அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறுமா என்பதை தொடர்ந்து கண்காணித்து தகவல் தெரிவிக்கப்படும் என தெரிவித்தார்.
இதனால், தமிழகம், புதுவை காரைக்கால் பகுதிகளில் அடுத்து வரும் ஐந்து நாட்களுக்கு அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் டிசம்பர் 2, 3 ஆம் தேதிகளில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை தற்போது வரை இயல்பை விட 8 சதவித குறைவாக பெய்துள்ளதாக தெரிவித்த அவர், வங்கக்கடலில் புயல் உருவாக உள்ளதால், ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தினார்.
இதற்கிடையே, வடகிழக்கு பருவமழையை தொடர்ந்து பேருந்துகளில் பராமரிப்பு அவசியம் என போக்குவரத்து கழகங்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.
மேற்கூரை, படிக்கட்டுகளை தொடர்ந்து கண்காணித்து பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.
![](https://www.madhimugam.com/wp-content/uploads/2024/07/002-10-x-15-a.jpg)