12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 50,000 மாணவர்கள் ஆப்சென்ட் விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம் அளித்தார். அப்போது ஊடகங்களில் இதுகுறித்து வெளியான செய்திகளையும் அவர் சுட்டிக்காட்டி பேசினார்.
12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் அதிக அளவில் பங்கேற்காததற்கான காரணம் குறித்து சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம். தயவு செய்து பிள்ளைகளை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி வையுங்கள். அவர்களை காக்க வேண்டிய பொறுப்பு எங்களுடையது – பெற்றோர்களுக்கு உருக்கமாக வேண்டுகோள் வைத்த அமைச்சர்.
12-ம் வகுப்பு மாணவர்கள் அதிக அளவில் பொதுத்தேர்வில் பங்கேற்காததற்கான காரணம் குறித்து சட்டப்பேரவையில் அதிமுக, சிபிஐ, காங்கிரஸ், பாமக, உள்ளிட்ட கட்சி பிரதிநிதிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.
இதுகுறித்து விளக்கம் அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 2020 – 21 ஆம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத மாணவர்கள் கொரோனா தொற்று காரணமாக அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்கள்.
இந்த மாணவர்களுடன் தற்பொழுது 12ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதுகின்றனர். 2021 – 22 ல் 11 -ம் வகுப்பு பொதுத் தேர்வில் 8,85,051 மாணவர்கள் பதிவு செய்து அதில் 41,306 மாணவர்கள் தேர்வில் கலந்து கொள்ளவில்லை.
அதேபோல கடந்தாண்டு 11ம் வகுப்பு பொதுத்தேர்வில் 83,811 பேர் தோல்வியடைந்தனர். அதன் தொடர்ச்சியாக 1 லட்சத்து 90 ஆயிரம் மாணவர்கள் இடைநிற்றல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, பொது தேர்வுக்கு ஆர்வம் இல்லாத ஒரு லட்சத்து 25 ஆயிரம் மாணவர்களில் 78 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுத வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த மாணவர்கள் பள்ளிக்கு வராமலே போயிருப்பார். அவர்களை மீண்டும் பள்ளிக்கு வர வைத்து 11ம் வகுப்பு தேர்வு எழுதி சுமார் 50,000 மாணவர்கள் தேர்ச்சி பெற வைத்துள்ளோம்.
3 நாட்களே வந்தால் போதும் ஹால் டிக்கெட் வழங்கப்படும் என நான் சொல்லியதாக சில ஊடகங்கள் திரித்து சொல்லப்பட்டன. அதற்கான விளக்கத்தை கொடுக்கும் போது அமைச்சர் அந்தர் பல்டி என போடுகிறார்கள். பத்திரிகை செய்திகள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தேவையில்லாது பதற்றத்தை ஏற்படுத்த கூடாது.
எதிர்காலத்தில் இது போன்ற ஒரு நிலை வரக்கூடாது என இந்த விளக்கத்தை அளித்துக் கொண்டிருக்கிறேன் என கறாராக விளக்கம் அளித்துள்ளார்.