தமிழ்நாட்டில் மின்னல் தாக்கி பிளஸ் 1 மாணவி உயிரிழந்ததை தொடர்ந்து பலியானோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இடி, மின்னலுடன் பெய்யும் கனமழையால் ஏராளமான வீடுகள் மின்னல் தாக்கி சேதமடைந்து வருகின்றன. இந்நிலையில் மின்னல் தாக்கி தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை 5 பேர் உயிரிழந்திருப்பது பெருஞ்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் அண்டம்பள்ளம் அண்ணா நகர் பகுதியில் சேர்ந்த முருகனின் மகள் வினோஷா 16 இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகிறார் நேற்று மாலை இவர் தனது விவசாய நிலத்தில் நீர் பாய்ந்து கொண்டிருந்தார் அப்போது பலத்த மழை பெய்த நிலையில் திடீரென மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே வரகப்பட்டு பகுதியை சேர்ந்த பெருமாள் என்பவரின் மனைவியான அஞ்சலி 36 வயது என்பவர் வயல்வெளிக்கு சென்ற போது மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். அதேபோல திண்டிவனம் பெரும்பாக்கத்தை சேர்ந்த துரைசாமியின் மனைவியான ரஞ்சிதமும் 60 வயதானவர் மின்னல் தாக்கி சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.
நேற்று மதுரை மாவட்டம் துறையூர் தாலுகா அனுப்பட்டியில் உள்ள கண்மாய் அருகே மாரிமுத்து என்ற 40 வயது நபர் ஆடு மேய்த்துக்கொண்டிருந்துள்ளார். அப்போது ஆலங்கட்டி மழை பெய்த போது, திடீரென மின்னல் தாக்கியதில் மாரிமுத்து சம்பவ இடத்திலேயே உடல் கருகி காலமானார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரைச் சேர்ந்த அன்பு என்பவர், தனது இளநீர் வியாபாரத்தை முடித்துக்கொண்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது திடீரென மழை பெய்ததால் புளிய மரத்திற்கு அடியில் ஒதுங்கியவர், மரத்தின் மீது மின்னல் தாக்கியதால் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
Discussion about this post