அவர் மீது ஏயப்பட்ட அம்பு..! முதலமைச்சர் விமர்சனம்..!! நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி…!!
சட்டமன்றப் பேரவையில் இன்று சபாநாயகர் அப்பாவுவை அந்த பதவியில் இருந்து நீக்கக்கோரும் தீர்மானத்தை சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த விவாதம் நடைபெற்றது. அப்போது உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,
அ.இ.அ.தி.மு.க உறுப்பினர்களால் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு அவர்களை பேரவைத் தலைவர் பதவியிலிருந்து நீக்கக்கோரும் தீர்மானம் தற்போது விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. மக்கள் நம்பிக்கையை இழந்தவர்களால் இப்படி ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டிருப்பதைப் பார்த்து மக்களே நகைப்பார்கள் என்பதுதான் உண்மை.
கடந்த 2017-ஆம் ஆண்டு, இதேபோன்ற ஒருதீர்மானம் வந்தது. தமிழக சட்டமன்ற வரலாறு நூற்றாண்டு விழாவினை இன்னும் நான்கு ஆண்டுகளில் காணப் போகிறது. “யாரும் யார் மீதும் விமர்சனம் வைக்கலாம், ஆனால் என்றாவது ஒருநாள் அவரை நேரில் சந்திக்க வேண்டும் என்பதை மனதில் வைத்து விமர்சியுங்கள்” என்று சொன்னவர் தலைவர் கலைஞர் அவர்கள். அதனால்தான் அவரை படமாக இல்லை, பாடமாக நிற்கிறார் என்று நான் குறிப்பிட்டேன்.
அவரது நூற்றாண்டு கொண்டாடும் வேளையில், இப்பேரவையின் தலைவராகப் பணியாற்றும் வாய்ப்பை மு.அப்பாவு அவர்கள் பெற்றிருக்கிறார். 2017-ஆம் ஆண்டு என்னால் இதுபோன்ற ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டதை எண்ணி நான் அன்றைக்கு வருந்தினேன் என்று என் உரையில் பதிவு செய்துள்ளேன்.
ஆனால் இத்தீர்மானம் இன்றைக்குக் கொண்டு வரப்பட்டதன் மூலம் – கடந்த பேரவைகளின் செயல்பாடுகள், அன்றைய பேரவைத் தலைவர் ஜனநாயகத்தை மதியாது நடந்துகொண்ட முறைகளையும் பற்றி இங்கேயுள்ள நம்முடைய பேரவை முன்னவர் உள்ளிட்ட பல்வேறு உறுப்பினர்களுக்கும், ஏன், நம்முடைய எதிர்க்கட்சித் தலைவர் அவர்களுக்கும் கூட நன்றாகத் தெரியும். நான் மீண்டும் அதைச் சொல்ல விரும்பவில்லை.
ஆனால் அவற்றோடு தற்போதைய பேரவைத் தலைவரின் செயல்பாடுகளை ஒப்பீடு செய்து, நம்முடைய பேரவைத் தலைவர் எவ்வாறு நடுநிலையோடு செயல்படுகிறார் என்பதை மக்கள் புரிந்துகொள்ளும் வாய்ப்பாக இந்த விவாதத்தைக் கருதுகிறேன்.
பேரவைத் தலைவர், ஜனநாயகக் கொள்கைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். மற்றவர்கள் மனம் வருந்தாத அளவில், தன்னுடைய நடவடிக்கைகளை அமைத்துக் கொள்பவர். நேர்மையாக கருத்துக்களை ஆணித்தரமாக முன்வைக்கும் பண்பு கொண்டவர். அவரது நடுநிலையோடு நிற்கும் நேர்மைத் திறனும், அனைவரிடமும் சிரித்த முகத்தோடு பழகும் பாங்கும் என்னைக் கவர்ந்த காரணத்தால்தான் அவரை இப்பதவிக்கு நான் முன்மொழிந்தேன்.
ஆசிரியராக இருந்து அரசியலுக்கு வந்தவர் நம்முடைய மாண்புமிகு அப்பாவு அவர்கள். கனிவானவர் – ஆனால் அதேநேரத்தில் கண்டிப்பானவர். இவை இரண்டுமே பேரவைக்குத் தேவை என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்வீர்கள் என்று நான் நினைக்கிறேன். இவை இல்லாவிட்டால் அவையை கண்ணியத்துடனும் கட்டுப்பாட்டுடனும் நடத்த இயலாது.
பேரவைத் தலைவருக்கு அருகில் வந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அன்போடு பேசிச் செல்வதை இந்தப் பேரவை உறுப்பினர்கள் அனைவரும் பார்த்த காட்சி தான். சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கண்ஜாடையாக அவரோடு பேசி தங்கள் எண்ணத்தை குறிப்பால் உணர்த்துவதையும் உங்களில் பலரும் பார்த்திருக்கலாம்.
எங்களைப் பொருத்தவரையிலும், விவாதங்களில் விருப்பு, வெறுப்பின்றி நாகரிகமாக வாதங்களை வைக்க வேண்டும்என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்கள். 23.3.2017 அன்று அன்றைக்கு இந்த அவையில் நான் பேசியதை எண்ணிப் பார்க்கிறேன். எத்தனை விதிமீறல்கள், மரபுகளிலிருந்து விலகல்கள், என்னுடைய உரையில் அன்றைக்குச் சுட்டிக்காட்டியுள்ளேன். நினைத்துப் பார்த்தாலே நெஞ்சம் சுடுகிறது. அதனை அனைவரும் படித்துப் பார்க்க வேண்டும்.
அவைக்கு ஒவ்வாத வார்த்தைகளாக அன்றைக்குப் பயன்படுத்தப்பட்ட பல சொற்கள், ‘அருகதை’, ‘தகுதி’, ‘என்ன யோக்கியதை இருக்கிறது’ என்று திமுக உறுப்பினர்களைப் பார்த்து அன்றைக்குப் பேசப்பட்ட அந்த வார்த்தைகள், இன்றைக்கு அவையில் பேசப்படுமானால், உடனே பேரவைத் தலைவரால் அந்த வார்த்தைகள் நீக்கப்பெற்றுள்ளன. இது அவர் மீது எய்தப்பட்ட அம்பாகவே கருதுகிறோம். இந்த அம்பை இந்த அவை ஏற்காது என இவ்வாறே அவர் பேசினார்.
இதனை அடுத்து சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அதிமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. குரல் வாக்கெடுப்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்த நிலையில் டிவிஷன் வாக்கெடுப்புக்கு கோரிக்கை வைத்துள்ளனர்