ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா மற்றும் நேட்டோ தலைமையிலான ஆட்சி வெளியேறியதைத் தொடர்ந்து, தாலிபன் அரசு ஆட்சியைப் பிடித்தது. ஆட்சியைப் பிடித்ததும் செப்டம்பர் 2021 இல் தலிபான் பெண்கள் இடைநிலைக் கல்வியைத் தடைசெய்தது, உயர்நிலைப் பள்ளிகளை ஆண்களுக்கு மட்டுமே மீண்டும் திறக்க உத்தரவிட்டது. கடந்த டிசம்பரில், கல்லூரி மற்றும் பல்கலைக்கழகம் செல்லும் பெண்களுக்கு தடை விதித்தது மற்றும் ஆயிரக்கணக்கானோருக்கு பல்கலைக்கழக கல்விக்கு காலவரையற்ற தடை விதித்தது.
கடந்த மாதம், ஐ.நா., சமீப மாதங்களில் ஆப்கானிஸ்தானில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உட்பட, பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான கட்டுப்பாடுகளை மேலும் அதிகரித்துள்ளதற்காக தாலிபன்களை விமர்சித்தது. பொது வாழ்க்கை மற்றும் பணியின் பெரும்பாலான பகுதிகளில் பெண்களை ஆட்சி தடை செய்துள்ளது. ஆறாம் வகுப்புக்கு அப்பால் பெண்கள் பள்ளிக்குச் செல்வதைத் தடை செய்வதும், ஆப்கானிஸ்தான் பெண்கள் உள்ளூர் மற்றும் அரசு சாரா நிறுவனங்களில் வேலை செய்வதைத் தடை செய்வதும் இதில் அடங்கும்.
இந்நிலையில் தான் ஆப்கானிஸ்தானின் சில மாகாணங்களில் 10 வயதுக்கு மேற்பட்ட சிறுமிகள் ஆரம்பப் பள்ளி வகுப்புகளுக்குச் செல்வதற்கு உள்ளூர் தாலிபான் அதிகாரிகள் தடை விதித்துள்ளது. கஜினி மாகாணத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் குறுகிய கால பயிற்சி வகுப்புகளின் முதல்வர்களிடம் தாலிபன் ஆளும் கல்வி அமைச்சகத்தின் அதிகாரிகள், “10 வயதுக்கு மேற்பட்ட எந்தப் பெண்ணும் ஆரம்பப் பள்ளிகளில் படிக்க அனுமதிக்ககூடாது என உத்தரவிட்டுள்ளது.
பிரபல செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், மூன்றாம் வகுப்பிற்கு மேல் உள்ள பெண் மாணவர்களை வீட்டிற்கு அனுப்புமாறு அதிகாரிகள் பெண்கள் படிக்கும் பள்ளியின் முதல்வர்களை கேட்டுக் கொண்டதாக தெரிவித்துள்ளது.