மணிரத்னம் இயக்கி கமல்ஹாசன் மற்றும் சிலம்பரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள தக் லைப் படம் பிரமாண்டமாக தயாராகியுள்ளது. ஜூன் 5ம் தேதி இந்த படம் வெளியாகிறது.
சென்னையில் நடந்த தக் லைஃப் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் கமல்ஹாசன், “சிவராஜ்குமாருடைய குடும்பம் அந்த ஊரில் இருக்கும் என்னுடைய குடும்பம். அதனால்தான் அவர் இங்கு வந்திருக்கிறார். அதனால்தான் என்னுடைய பேச்சை தொடங்கும்போது ‘உயிரே உறவே தமிழே’ என்று தொடங்கினேன். தமிழிலிருந்து பிறந்ததுதான் கன்னடம் நீங்களும் அதில் உட்படுவீர்கள்.” என்று பேசினார்.
இதையடுத்து, கமல்ஹாசனின் பேச்சுக்கு கர்நாடகத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கர்நாடக மாநில பா.ஜ.க. தலைவர் விஜயேந்திர எடியூரப்பா, இது குறித்து ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தாய்மொழியை நேசிக்க வேண்டும். ஆனால் அதற்காக பிற மொழிகளை அவமதிப்பது அநாகரீகமான செயல். கன்னடம் உட்பட பல இந்திய மொழிகளில் நடித்துள்ள நடிகர் கமல்ஹாசன், தனது தமிழ் மொழியை போற்றுவதற்காக நடிகர் சிவராஜ்குமாரையும் சேர்த்து கன்னடத்தை அவமதித்தித்துள்ளார்ல. இது, ஆணவத்தின் உச்சம். ஒரு மொழியிலிருந்து எந்த மொழி பிறந்தது என்பதை சொல்ல கமல்ஹாசன் வரலாற்று ஆய்வாளரா? என்று கேள்வி எழுப்பினார்.
கன்னட மொழி 2,500 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்டது .தென்னிந்தியாவிற்கு நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டிய கமல்ஹாசன், கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து இந்து மதத்தை அவமதிப்பதையே வழக்கமாக கொண்டுள்ளார். இப்போது, 6.5 கோடி கன்னடர்களின் சுயமரியாதையை புண்படுத்தி கன்னடத்தை அவமதித்துள்ளார். கமல்ஹாசன் உடனடியாக கன்னட மக்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.
இதற்கிடையே, பெங்களூரில் ஒட்டப்பட்டிருந்த நடிகர் கமல்ஹாசனின் ‘தக் லைப்’ படத்தின் பேனரை கன்னட அமைப்பினர் கிழித்து அகற்றினர்.