7ம் கட்ட வாக்குப்பதிவு..! வாரணாசியின் தேர்தல் நிலவரம்..!
2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் கடைசி மற்றும் 7ம் கட்ட வாக்குப்பதிவு இன்று 57 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசியிலும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இங்கு மோடி உட்பட 7 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இதனால் வாரணாசி உள்ள 1,909 வாக்குச்சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாரணாசியில் இம்முறை 19,97,577 பேர் தகுதியுள்ள வாக்காளர்கள் இருப்பதால் கூடுதல் இராணுவ படையினரும் போடப்பட்டுள்ளனர்.
இதில், பெண் வாக்காளர்கள் 9,13,692 பேரும், ஆண் வாக்காளர்கள் 10,83,750 பேரும், திருநங்கைகள் 135 பேரும், முதல்முறை வாக்களிப்பவர்கள் 37,226 பேரும் இருக்கின்றனர். முதியோர் வாக்காளர்களில் 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 9,934 பேரும், 100 வயதுக்கு மேற்பட்டவர்கள் 67 பேரும் உள்ளனர்.
கடந்த 2019 ஆம் ஆண்டை விட இந்த முறை வாரணாசியில் 1,43,000 வாக்காளர்கள் கூடுதலாக இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தொகுதி ரீதியாக வாக்காளர்களைக் கணக்கிட்டதில், ரோஹனியா சட்டமன்ற தொகுதியில் 40,18,492 வாக்காளர்களும், வடக்கு சட்டமன்றத்தில் 4,39,685 வாக்காளர்களும், வாரணாசி தெற்கு சட்டமன்றத்தில் 3,17,793 வாக்காளர்களும், கான்ட் சட்டமன்றத்தில் 45,765 மற்றும் சேவாபுரி சட்டமன்றத்தில் 3,55,842 வாக்காளர்களும் உள்ளனர்.
இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 1,909 வாக்குச்சாவடிகளில் 34 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை. குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் தொகுதி என்பதனால் வாரணாசியில் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. 18 மண்டலங்களில் இருந்து மொத்தம் 127 துறை நீதிபதிகள் தேர்தல் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
கடைசி கட்ட வாக்குப்பதிவை முன்னிட்டு, வாரணாசியில் 34 அதி விரைவு அலெர்ட் குழுக்கள், 1,700 மத்திய துணை ராணுவ வீரர்கள் மற்றும் 800 ஜவான்கள் மற்றும் 12,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இது தவிர, 32 ட்ரோன் கேமராக்கள் மூலம் தீவிர கண்காணிப்பு பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
– லோகேஸ்வரி.வெ
கதைகள் – 75 | தொடர்கதை – 2 | க்ரைம் – 572 + | கவிதை – 150 + | Written – 3000 +
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..