நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் யோகா கலை படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் 36ஆண்டுகளுக்கு பிறகு 56வயதில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய தனம் என்பவர் 247 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார்.,கல்வி கற்க வயது தடையில்லை என்பதை தனம் நிரூப்பித்து காட்டியுள்ளார்.
தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின.இதில் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ராஜ வீதியை சேர்ந்த தனம் என்பவர் கடந்த 1980ம் ஆண்டு 8ம் வகுப்பு வரை படித்துவிட்டு திருமணம் நிகழ்ந்ததால் கல்வி படிப்பை தொடர முடியவில்லை.இதன் பின்பு யோகா கலை மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக கடந்த ஆண்டு டிசம்பர் யோகா கலையில் பட்டம் பயில வேண்டும் என்று விரும்பிய நிலையில் அதற்கு 10ம் வகுப்பு தேர்ச்சி கட்டாயம் என்பதால் மூதாட்டி தனம் தனது இரண்டு மகன்களுக்கு திருமணம் முடிந்து பேர பிள்ளைகள் பெற்ற போதிலும், மனம் தளராமல் 10ம் வகுப்பு பயின்று தனித்தேர்வகள் பிரிவில் பொதுத்தேர்வினை எதிர்கொண்டார்.
இதன் பயனாக தமிழ் 65, ஆங்கிலம் 48, கணிதம் 44, அறிவியல் 46, சமூக அறிவியல் 44 என 247 மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதனால் தனது முயற்சிக்கு கிடைத்த வெற்றியை எண்ணி மூதாட்டி தனம் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார்.
மூதாட்டி தனம் தேர்ச்சி பெற்றதை அவரது குடும்பத்தினர் உறவினர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்து தனத்தை பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.இது குறித்து தனம் கூறுகையில் தனது இளம் வயது திருமணம் காரணமாக கல்வியை கற்க முடியாமல் கவலை அளித்து வந்த நிலையில் தற்போது 10ம் வகுப்பு தேர்ச்சி தனக்கு மேலும் உத்வேகத்தை அளிப்பதுடன் யோகா சார்ந்த படிப்பில் பட்டம் பயின்று யோகா கலையை கற்பிக்கும் ஆசிரியராக மாறுவேன் என்று நம்பிக்கை அளித்தார்.மேலும் கல்வியை கற்க வயது தடையில்லை என்பதை அனைவரும் அறிந்து கல்வி மீது ஆர்வத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என மூதாட்டி தனம் கேட்டு கொண்டார்.
Discussion about this post