இந்துத்துவா சக்திகளின் முயற்சிகளை முறியடிப்போம்..!! சபதம் ஏற்போம்..!!
மாநில சுயாட்சி மலர சபதம் ஏற்போம் கருணையைப் போற்றும் கிறிஸ்தவர்களுக்கு மறுமலர்ச்சி திமுக சார்பில் ஈஸ்டர் தின வாழ்த்துக்களை மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ தெரிவித்தார். கொடுந்துயரில் தவிப்போருக்கு விடியல், நீதியை உதிக்க செய்யும் நம்பிக்கையை ஈஸ்டர் வழங்குகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் பண்டிகையையொட்டி அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இருளைக் கிழித்து ஒளி எழுதல் போல, ஒரு புனித வெள்ளிக்கிழமை அன்று, சிலுவையில் அறையப்பட்டு, மனிதகுலத்தின் அவலத்தைப் போக்க, இரத்தம் சிந்திய கிறிஸ்து இயேசுநாதர், மூன்றாம் நாள் உயிர்த்து எழுந்த உன்னதத்தை, ஈஸ்டர் பண்டிகையாக உலகெWங்கும் உள்ள கிறிஸ்தவப் பெருமக்கள் கொண்டாடுவதாக வைகோ தெரிவித்துள்ளார்
கொடுந்துயரில் தவிப்பவர்களுக்கும், மரண இருளில் கலங்குகின்றவர்களுக்கும், அநீதியின் பாரத்தால் நசுக்குண்டவர்களுக்கும், விடியலும் நீதியும் ஒருநாள் உதிக்கவே செய்யும் என்ற நம்பிக்கையை அவர்களது மனங்களில் ஈஸ்டர் வழங்குவதாக வைகோ தெரிவித்துள்ளார்.
சனாதன இந்துத்துவா சக்தி முறி :
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் அற்புதமான ஆட்சி அமைந்துள்ளதாக தெரிவித்துள்ள வைகோ, கூட்டாட்சித் தத்துவம் வெற்றிபெறவும், மாநில சுயாட்சி மலரவும், சனாதன இந்துத்துவா சக்திகளின் முயற்சிகளை முறியடிக்கவும் இந்நாளில் சபதம் ஏற்போம் எனவும் தெரிவித்துள்ளார்
மேலும் மரண பயங்கரத்துக்கு ஆளாகி துயர இருளிலும் கண்ணீரிலும், துடிதுடித்து வாடும் ஈழத்தமிழ் மக்களுக்கும் நீதி கிடைக்கும் விடியல் உதிக்கும். அதற்காக இந்த ஈஸ்டர் திருநாளில் தமிழ்க்குலம் உறுதி எடுக்கட்டும் எனவும் வைகோ தெரிவித்துள்ளார். கருணையைப் போற்றும் கிறிஸ்தவப் பெருமக்களுக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஈஸ்டர் பண்டிகை வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக வைகோ தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்