மரண பயத்தில் இருந்தோம்..! 2ம் நாளே பழுதான ரோப்கார்..! அச்சத்தில் பயணிகள்..!
கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள அய்யர்மலை ரத்தனகிரீஸ்வரர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற மலைக்கோவில் சுமார் 1,176 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு கரூர் மட்டுமின்றி திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
அங்கு வரும் பக்தர்கள் மலை கோவிலுக்கு செல்ல படிக்கட்டு வழியாக சென்று தான் சாமி தரிசனம் செய்ய வேண்டி இருக்கும்.. அப்படி இருக்க மலை உச்சிக்குச் செல்ல ரூ.6.70 கோடி மதிப்பீட்டில் ரோப்கார் (கம்பி வட ஊர்தி சேவை) வசதியானது, பல்வேறு கட்ட சோதனைக்குப் பிறகு நேற்று முன்தினம் ( ஜூலை 24ம் தேதி) தொடங்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் காணொளி காட்சி வாயிலாகத் திறந்து வைக்கப்பட்டது.
பழனி முருகன் கோவிலில் உள்ளது போல, பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்வதற்காக 2.40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காத்திருப்பு அறை, பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள், கட்டண வசூல் மையம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளுடன் கூடிய 9 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒரு மணி நேரத்தில் 192 பேர் பயணம் செய்யும் வகையில், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ரோப்கார் வசதியும் திறக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 2 நாட்களாக மலைக்கோவிலில் உள்ள ரத்தனகிரிஸ்வரர் சாமியே தரிசிக்க முதல் முறையாக ரோப்கார் வசதி மூலம் பக்தர்கள் பலரும் மலை உச்சிக்கு சென்று சாமி தரிசனம் செய்து வந்துள்ளனர்.
அதேபோல், நேற்று கோயில் மலை உச்சிக்குச் சென்ற ரோப்கார் பெட்டிகளின் மேல் இணைக்கப்பட்ட கயிறு, பலத்த காற்றின் காரணமாக நழுவியதால் ரோப்கார் இயங்காமல் பாதி வழியிலேயே நின்றதால் பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
அதேபோல் திருச்சியில் இருந்து கோவிலுக்கு வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண் பக்தர்கள், மலை உச்சியில் சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பிய போது பெட்டியில் அமர்ந்தவாறு நடுவழியில் சிக்கித் தவித்துள்ளனர். இதுகுறித்து, தகவலறிந்து வந்த மேலாளர் உட்பட 8 ஊழியர்கள் சுமார் 2.30 மணி நேர கடும் போராட்டத்திற்குப் பின் பத்திரமாக மீட்டனர்.
அதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் கூடிய பொதுமக்கள் பழுது குறித்து ஆய்வு செய்ய வந்த அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், அந்த பெண்கள் மூவரும் சொந்த ஊருக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அதன் பின் ரோப்காரில் சிக்கிய பெண்கள் கூறியதாவது, “இறங்குவதற்கு சிறிது தொலைவு இருக்கும் போது ரோப்கார் பழுதடைந்து பாதியிலேயே நின்றுவிட்டது. இதனால் பல மணி நேரமாக அதன் உள்ளேயே நாங்கள் சிக்கித் தவித்தோம். மயக்கம் வந்துவிட்டது. அப்போது யாராலும் தண்ணீர் கொடுத்து கூட உதவ முடியவில்லை., மரண பயத்தை உணர்ந்ததாக நாங்கள் அறிந்தோம் சாமி தான் எங்களைக் காப்பாற்றியது” எனத் தெரிவித்தனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..