5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்றுக் கொள்கிறோம் என்று காங். எம்.பி., ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று(மார்ச்.10) காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், தற்போது முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, உ.பி, கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் மாநிலங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது. பஞ்சாபில் ஆம் ஆத்மி முன்னிலையில் உள்ளது.
இதையடுத்து, 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ” மக்கள் வழங்கியுள்ள தீர்ப்பை மனதார ஏற்கிறேன். வெற்றி பெற்றவர்களுக்கு எனது வாழ்த்துகள். இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்காக கடுமையாக உழைத்த தொண்டர்கள் மற்றும் நலன் விரும்பிகளுக்கும் எனது நன்றிகள்.
இந்த தேர்தல் முடிவுகளிலிருந்து பாடம் கற்று, இந்திய மக்களின் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவோம்” என பதிவிட்டுள்ளார்.