30 ஆண்டுகளாக சிறையில் இருந்த வீரப்பனின் முக்கிய கூட்டாளியான மீசை மாதையன், நேற்று மருத்துவமனையில் உயிரிழந்ததை அடுத்து, அவரது சடலம் இன்று மாலை சொந்த ஊரில் எரியூட்டப்பட்டது.
வீரப்பன் கூட்டாளிகளில் முக்கியமானவர் மீசை மாதையன் இவர் வீரப்பனின் உறவினர் ஆவார். வீரப்பனின் விசுவாசியான மீசை மாதையன் சந்தன மர கடத்தலின் போது வீரப்பனுக்கு துணையாக இருந்ததால், அவரை கர்நாடக போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சுமார் 30 ஆண்டுகளாக சிறையில் இருந்த மீசைக்கார மாதையன் உடல் நலிவுற்று சிறை கண்காணிப்பில் பெங்களூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் நேற்று கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சந்தன வீரப்பனின் கூட்டாளி மீசைக்கார மாதையன் உயிரிழந்தார். அவரது சடலம் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான கொளத்தூர் அருகே உள்ள கோட்டைமேடு கிராமத்திற்கு இன்று மாலை 4.30 மணி அளவில் கொண்டுவரப்பட்டது.
அவரது உடலை மனைவி தங்கம்மாள் மற்றும் உறவினரான சந்தன கடத்தல் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி மற்றும் உறவினர்கள் பெற்றுக் கொண்டனர் . சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கோட்டை மடுவு கிராமத்தில் , குல வழக்கப்படியான சடங்குகளுக்கு பிறகு 5.30 மணிக்கு மீசை மாதையன் சடலம் எரியூட்டப்பட்டது.
வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.