JEE தேர்வில் சாதனை படைத்த பழங்குடியின மாணவிகள்..! வாய்ப்பு கொடுத்த பிரபல தனியார் கல்லூரி..!
திருச்சி மாவட்டம் துறையூர் மாவட்டம் அருகேயுள்ள பச்சமலை கிராமத்தில், தொலை தொடர்பு, இணையதள சேவை, மின்சார வசதி என பல குறைந்த அடிப்படை வசதிகளை கொண்ட ஒரு மலைப் பகுதியான இந்த கிராமத்தில் பழங்குடியின இனத்தை சேர்ந்த மாணவிகள் ரோகினி, சுகன்யா ஆகியோர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
மாணவி ரோகினி பச்சமலை அடுத்த சின்ன இலுப்பூர் பகுதியில் உள்ள அரசு பழங்குடியினர் நல மேல்நிலைப்பள்ளியில் படித்தவர் நடந்து முடிந்த 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 423 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றவர்.
அதன் பின் ஜேஇஇ தேர்வில் 73.8 சதவிகிதம் மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். இந்நிலையில், மாணவி ரோகினிக்கு திருச்சி துவாக்குடியில் உள்ள தேசிய தொழில் நுட்பக் கழகத்தில் (National Institute of Technology) வேதிப்பொறியியல் படிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இது குறித்து மாணவி ரோஹிணியிடம் நம் மதிமுகம் தொடர்பு கொண்டு செல்போனில் பேசிய போது, “மலைவாழ் மக்களுக்கான பள்ளியில் 12ம் வகுப்பு வரை படித்து, ஜேஇஇ நுழைவுத் தேர்வு எழுதினேன். அதில் 73.8 சதவீதம் தேர்ச்சி பெற்று, தற்போது திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் வேதிப் பொறியியல் (Chemical Engineering) படிப்பதற்கு இடம் கிடைத்தது எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது.
மேலும், எனது படிப்பிற்கான முழுச் செலவையும் தமிழக அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. இது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. பள்ளியில் படித்த போது, எங்களை தேசிய தொழில்நுட்ப கழகத்தில் உள்ள கெமிக்கல் ஆய்வகத்திற்கு அழைத்து சென்றார்கள்.
அப்பொழுது ஏற்பட்ட ஆர்வத்தின் காரணமாக ஆசிரியர்களிடம் தேசிய தொழில்நுட்ப கழகத்தில் சேர என்ன செய்ய வேண்டும் என்று கேட்டேன். அதற்கு ஜேஇஇ தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என ஆசிரியர்கள் சொன்னார்கள்..
அவர்களின் அறிவுறுத்தலின் படி, 12ஆம் வகுப்பு தேர்விலும், ஜேஇஇ தேர்விலும் தேர்ச்சி பெற பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் உறவினர்கள் ஊக்கப்படுத்தியதோடு பல உதவிகளையும் செய்தனர்.
தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றதை அறிந்த தமிழக முதலமைச்சர் எனக்கு மேற்படிப்பிற்கு உதவுவதாக சொன்னார். முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என மாணவி ரோகினி பேசினார்.
– லோகேஸ்வரி.வெ