தகுதியே இல்லாமல் சிகிச்சை.. அதிரடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்..
பல்லடம் அருகே சின்ன காளி பாளையத்தில் முறைகேடாக கிளினிக் மற்றும் மருந்தகங்கள் செயல்படுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது.
அதன்பேரில் திருப்பூர் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் கனகராணி, பல்லடம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கவிதா லட்சுமி, அலுவலக கண்காணிப்பாளர் ஹரி கோபால கிருஷ்ணன்
மற்றும் இளநிலை உதவியாளர் ராஜேஷ் ஆகியோர் கொண்ட குழுவினர் திருப்பூர் இடுவாய், சின்னக்காளிப்பாளையம் பகுதியில் உள்ள கிளினிக் மற்றும் மருந்தகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அந்த பகுதியில் இருந்த கிளினிக்கில் டாக்டர் மார்சல் முகேஷ் ஆண்டனி எம்.பி.பி.எஸ். என்ற மருத்துவரின் பெயர் பலகையில் இருந்தது.
ஆனால் அங்கு வரும் நோயாளிகளுக்கு உரிய கல்வி தகுதி இல்லாத அதே இடத்தில் இருந்த மருந்தக உரிமையாளர் லிட்டில் ப்ளோரா என்பவர் சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் அதிகாரிகள் அந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்களிடம் கேட்டனர். அப்போது லிட்டில் ப்ளோரா என்பவர் தான் சிகிச்சை அளித்து வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், டாக்டர் மார்சல் முகேஷ் ஆண்டனி என்பவரை தொடர்பு கொண்ட போது தான் அங்கு வருவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து முறைகேடாக செயல்பட்ட கிளினிக் மற்றும் மருந்தகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
மேலும், இது சம்பந்தமாக டாக்டர் மெர்சல் மகேஷ் ஆண்டனி, லிட்டில் ப்ளோரா, மெடிக்கலில் வேலை பார்த்து வந்த நளினி ஆகியோரை வருகிற 21-ம் தேதி தகுந்த ஆதாரங்களுடன் இணை இயக்குனர் அலுவலகத்தில் நேரில் ஆஜராக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-பவானி கார்த்திக்