விருதாச்சலத்தில் மருமகளின் நடத்தையில் சந்தேகப்பட்ட மாமியார், மருமகளின் மீது பாத்ரூம் ஆசிட்டை ஊற்றியும், கொசு விரட்டி மருந்தை, வாயில் ஊற்றியும் கொலை செய்ய முற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கலிவரதனின் மனைவி ஆண்டாள்(வயது 55). இவர் விருத்தாசலம் அதிமுக நகர துணை செயலாளர் இவரது மகன் முகேஷ் ராஜு -க்கு, தனது அண்ணனான ஆழ்வார் என்பவரின் மகளான கிருத்திகா-வை கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இவர்களுக்கு ரிஷிதா, ரிஷிகா என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கிருத்திகாவின் கணவரான, முகேஷ் ராஜ் அவிநாசியில் வேலை செய்து வரும் நிலையில், விடுமுறை நாட்களுக்கு மட்டும் வீட்டிற்கு வந்து செல்வதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்றிரவு வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த, கிருத்திகா மீது, அவரது நடத்தையில் சந்தேகப்பட்டு, மாமியார் ஆண்டாள், பாத்ரூம் கழுவ பயன்படுத்தும் ஆசிட்டை கிருத்திகாவின் முகம், கண்கள், காது, உடல், பல இடங்களில் ஊற்றியுள்ளார்.
மேலும் இரவு நேரங்களில் பயன்படுத்தப்படும், கொசு விரட்டி மருந்தை வாயில் ஊற்றி கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். இதனால் கீர்த்திகா வலியால் கதறி துடிக்கும் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பாதிக்கப்பட்ட கிருத்திகாவை மீட்டு விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை செய்து, மேல் சிகிச்சைக்காக, பாண்டிச்சேரி கொண்டு சென்றனர். இச்சம்பவத்தில் கிருத்திகாவின் வலது கண் பார்வை இழந்துவிட்டதால், பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து விருத்தாச்சலம் காவல்துறையினர் வழக்கு பதிந்து, ஆண்டாள் மற்றும் அவரது மகன் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நடத்தையில் சந்தேகப்பட்டு, மருமகள் மீது பாத்ரூம் ஆசிட் வீசி கொலை செய்ய முற்பட்ட ஆண்டாள் அதிமுக நகர துணை செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது