“இன்னைக்கு ஒரு புடி..” சிறைக் கைதிகளுக்கு மட்டன், சிக்கன் அசைவ விருந்து..!! எங்கு தெரியுமா..?
துர்கா பூஜையின்போது மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளி அதிகாரிகள் சிறைக் கைதிகளுக்கு மட்டன் பிரியாணி, சிக்கன் தொக்கு என சிறப்பு உணவுகளைத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேற்கு வங்க மாநிலத்தில் துர்கா பூஜை கொண்டாட்டம் கோலாகலமாகக் கொண்டாடப்படும். இந்நிலையில், இந்த கொண்டாட்டத்தில் இருந்து விலகியிருப்பதாக கைதிகள் உணரக் கூடாது என்பதற்காக கைதிகளுக்கு துர்கா பூஜையின்போது மட்டன் பிரியாணி, சிக்கன் தொக்கு, புலாவ் வகைகள், இறால், மீன் போன்ற உணவுகள் வழங்க முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து, மேற்கு வங்க சீர்திருத்த இல்லங்களுக்கான அதிகாரி கூறுகையில், சிறைக் கைதிகளுக்கான இந்த சிறப்பு மெனு துர்கான பூஜையின் ஆரம்ப நாளான அக்டோபர் 9 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை அமலில் இருக்கம். சிறையில் உள்ள விசாரணைக் கைதிகள் மற்றும் தண்டனை பெற்ற கைதிகள் அனைவருக்கும் மதிய மற்றும் இரவு உணவுகள் மாற்றியமைக்கப்படும் என்று தெரிவித்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் பண்டிகை தினங்களின்போது சிறந்த உணவு வழங்க வேண்டும் என்று சிறைக் கைதிகள் கோரிக்கைகள் விடுப்பார்கள். எனவே, இந்த கோரிக்கையை ஏற்று சிறப்பு உணவு வழங்குவதற்கான மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த செய்தி சிறைக் கைதிகளுக்கு மிகவும் மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என்றும், சிறைக் கைதிகளுக்காக எடுக்கப்படும் இந்த மாற்றம் நன்மை பயக்கும் வகையில் அமையும் என்று நாங்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருப்பதாக தெரிவித்தனர்.
மேலும் சிறப்பு உணவாக சிறைக் கைதிகளுக்கு மட்டன் பிரியாணி, மீன் இறைச்சியுடன் மலபார் கீரை, மீன் இறைச்சியுடன் கூடிய பருப்புக் கடையல், பூரி மற்றும் கொண்டைக்கடலை, சிக்கன் குழம்பு, பெங்காலி இனிப்பு வகைகள், பாஸ்மதி அரிசியில் செய்த புலாவ் வகைகள், உருளைக்கிழங்குடன் கூடிய இறால் உள்ளிட்டவை ஒவ்வொரு நாளும் வழங்கப்படும்.
இதை தொடர்ந்து அசைவம், சைவம் என சிறைக் கைதிகளின் விருப்பதிற்கேற்ப தனித்தனியாக உணவுகள் சமைக்கப்பட்டு அவர்களுக்கு விருப்பத்துக்கு ஏற்ப வழங்க உள்ளோம்.
மேற்கு வங்கத்தினரைப் பொறுத்தவரை துர்கா பூஜை உள்ளிட்ட பண்டிகைகள் மீன் மற்றும் இறைச்சி இல்லாமல் நிறைவடையாது. எனவே, சிறைக் கைதிகள் அனைவரும் சாப்பிட்டு மகிழ்ச்சியாக இருக்கும் வகையில் அவர்களுக்கு வழங்கப்படும் உணவுகளில் நாங்கள் இந்த மாற்றத்தை செய்துள்ளோம் என்று தெரிவித்துள்ளனர்.
– கவிப்பிரியா