தமிழ்நாடு சட்டப்பேரவை அக்டோபர் 9ம் தேதி கூடும் என சட்டப்பேரவை தலைவர் அப்பாவு அறிவிப்பு.
சென்னை தலைமை செயலகத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த பேரவை தலைவர் அப்பாவு, தமிழ்நாடு சட்டப்பேரவை அக்டோபர் 9ம் தேதி கூடுகிறது. 2023-24ம் ஆண்டிற்கான கூடுதல் செலவினங்களுக்கான மானிய கோரிக்கையை சட்டமன்றத்தில் நிதி அமைச்சர் தாக்கல் செய்கிறார். மகளிர் 33% இடஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றினால் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும். ஆனால் மகளிர் 33% இடஒதுக்கீடு மசோதா நடைமுறைப்படுத்தப்படுமா என கேள்வியெழுப்பினார்.
மேலும், 2014ல் மகளிருக்கான 33% இடஒதுக்கீடு மசோதா கொண்டிருந்தால் இந்த மசோதா நிறைவேறி இருக்கும் என்றும் ஆனால் மகளிர் மசோதா தேர்தலை மனதில் வைத்து கொண்டுவரப்பட்டது. மகளிர் இடஒதுக்கீடு மசோதவை அறிமுகப்படுத்திய ஒன்றிய அரசு தற்போது நடைமுறைப்படுத்த சாத்தியம் இல்லை என தெளிவுபடுத்தியுள்ளது.
கலைஞர் மகளிர் உரிமை தொகை மூலம் 1.6 கோடி பேர் பயனடைந்துள்ளனர். கலைஞர் உரிமை தொகை மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. மகளிருக்கு எதாவது செய்ய வேண்டும் என்ற தோற்றத்தை எற்படுத்த மகளிர் மசோதா கொண்டு வரப்பட்டுள்ளதா என கேள்வியெழுப்பினார்.
குடியரசு தலைவரை புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவிற்கும் அழைக்கவில்லை, நாடளுமன்ற கூட்டு கூட்டத்திற்கும், பழைய நாடாளுமன்ற நிறைவு விழாவிற்கு அழைப்பு விடுக்கவில்லை. என்ன காரணத்திற்காக குடியரசுத்தலைவர் புறக்கணிக்கப்படுகிறார் என தெரியவில்லை.
ஓமந்தூரர் தோட்டத்தில் உள்ள பன்நோக்கு மருத்துவமனை குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார். புதிய தலைமை செயலகம் கட்டுவது தொடர்பாக முதலமைச்சர் முடிவு செய்வார். பேரவையில் கேள்வி நேரம் முழுவதும் நேரலை செய்யப்படுவது தொடரும். எதிர்கட்சி துணை தலைவர் இருக்கை தொடர்பாக ஏற்கனவே முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என பேரவை தலைவர் அப்பாவு பேசினார்.