இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது இந்து சமய அறநிலையத்துறை தொடர்பான 249 புதிய அறிவிப்புகளை அமைச்சர் சேகர் பாபு வெளியிட்டார்.
திருக்கோயில்களில் நடைபெறும் திருமணங்களில் மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருப்பின் அவர்களுக்கு புத்தாடைகளுடன் கட்டணமில்லா திருமணம் அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாண்டு முதல் அத்திருமணங்களுக்கு 4 கிராம் பொன் தாலி திருக்கோயில் சார்பில் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
தற்போது 15,000 திருக்கோயில்களில் நடைமுறையில் உள்ள ஒரு கால பூசைத் திட்டம் மேலும் 2,000 திருக்கோயில்களுக்கு விரிவுபடுத்தப்படும். இத்திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு மாத உதவித் தொகையாக ரூ.1,000/- வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு கால பூசை திருக்கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்களின் பிள்ளைகளின் மேற்படிப்பு நலன் கருதி ஆண்டுதோறும் 400 மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கிட தனியாக ஒரு மைய நிதி ஏற்படுத்தப்படும்.
ஓய்வுபெற்ற திருக்கோயில் பணியாளர்களுக்கு வழங்கப்படும் மாத ஓய்வூதியம் ரூ.3,000/-லிருந்து ரூ.4,000/- ஆக உயர்த்தி வழங்கப்படும்.
குடும்ப ஓய்வூதியம் ரூ.1,500/- லிருந்து ரூ.2,000/- ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றும், ஓய்வுபெற்ற திருக்கோயில் பணியாளர்களுக்கு பொங்கல் கொடையாக ரூ.1,000/- வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருக்கோயில்கள் சார்பில் நடத்தப்படும் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில் பயிற்சி முடித்தவர்கள், பணி அனுபவம் பெற ஏதுவாக திருக்கோயில்களில் மூத்த அர்ச்சகர்களின் கீழ் பணி அனுபவம் பெற வாய்ப்பளித்து ரூ.6,000/- மாத ஊக்கத் தொகை வழங்கப்படும் என்றும் அறநிலையத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.