முசிறி அருகே பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவத்தில் மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, தலைமை ஆசிரியர் உட்பட மூவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் முசிறி அருகே தொட்டியம்
பாலசமுத்திரம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் சக மாணவர்கள் தாக்கியதால் படுகாயம் அடைந்த பத்தாம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவத்தில் சக மாணவர்கள் 3 கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தலைமையாசிரியர் உட்பட மூன்று ஆசிரியர்கள் மீதும் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் முசிறி அருகே தொட்டியம் பால சமுத்திரத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.இன்று (10.3.2023) பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தடியில் அமர்ந்து மாணவர்கள் படித்துக் கொண்டிருந்தனர். அப்போது மாணவர்கள் தங்களுக்குள் சிறு சிறு கற்களை எடுத்து போட்டு விளையாடியதாக தெரிகிறது.
அப்போது பத்தாம் வகுப்பு படித்து வந்த மெவுலீஸ்வரன் என்ற மாணவன் தன் மீது கற்களை வீசுவதாக தவறாக நினைத்துக் கொண்டு மவுளீஸ்வரனை மூன்று சக மாணவர்கள் அடித்து உதைத்து தாக்கியுள்ளனர். இதில் அருகில் இருந்த மரத்தில் மோதிய மெவுலீஸ்வரன் படுகாயம் அடைந்து இறந்து போனார்.
இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் முசிறி போலீஸ் டிஎஸ்பி யாஸ்மின் தலைமையிலான போலீசார் பள்ளி வளாகத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தி மூன்று மாணவர்களை கைது செய்துள்ளனர்.
மேலும் பணியில் அலட்சியமாகவும், மெத்தன போக்காகவும் நடந்து கொண்ட பள்ளி தலைமை ஆசிரியை ஈஸ்வரி, வகுப்பு ஆசிரியர் ராஜேந்திரன், மற்றொரு ஆசிரியை வனிதா ஆகியோர் மீதும் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆசிரியர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ள நிலையில் கல்வித்தரை சார்பில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. சிறுவனின் சடலம் நாமக்கல் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் போலீசாரின் அடுத்தடுத்து நடவடிக்கைகள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பத்தாம் வகுப்பு தேர்வு எழுத இருந்த நிலையில் சக மாணவர்கள் தாக்கியதில் பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.