திருச்செந்தூர் நாழிக்கிணறு பகுதியில் உள்வாங்கிய கடல்… அச்சமின்றி பக்தர்கள் செய்த செயல்..!
உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆவனி மாத பௌர்ணமி தினத்தையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலானது, முருகப்பெருமான் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகவும், சிறந்த பரிகார ஸ்தலமாகவும் விளங்கி வருகிறது.
இதனால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த கோயிலில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
குறிப்பாக பௌர்ணமி தினத்தில் கோயில் கடற்கரையில் தங்கி சுவாமி தரிசனம் செய்தால் நினைத்த காரியம் நிறைவேறும் என மக்கள் நம்புகின்றனர். இந்த நம்பிக்கையின் அடிப்படையில் கடந்த சில மாதங்களாக பௌர்ணமி தினங்களன்று பக்தர்கள் வருகை அதிகமாக இருந்து வருகிறது.
பௌர்ணமி அன்று குடும்பமாக கடற்கரையில் தங்கியிருந்து பரிகார பூஜைகள் செய்து, வழிபாடு நடத்துகின்றனர்.
இந்த நிலையில் நேற்று ஆவணி மாத பௌர்ணமி தினத்தை முன்னிட்டு சென்னை, மதுரை, கோவை, திருச்சி, காஞ்சிபுரம் போன்ற வெளி மாவட்டங்களில் இருந்தும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூர் கோவிலுக்கு வருகை தந்தனர்.
இந்த நிலையில் திருச்செந்தூர் நாழிக்கிணறு பகுதியில் இருந்து அய்யா கோவில் வரை சுமார் 500 மீட்டர் நீளத்திற்கு கடல் நீர் 50 அடி தூரத்திற்கு உள்வாங்கி காணப்படுகிறது. இதனால் கடலில் பாறைகள் வெளியே தெரிவதால் அதன் மீது பக்தர்கள் எந்தவித அச்சமும் இல்லாமல் செல்பி எடுத்து வருகின்றனர். கோவில் கடற்கரை பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் கடற்கரை பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
-பவானி கார்த்திக்