நகைச்சுவை நடிகர் போண்டா மணிக்கு உதவி செய்வது போல் பழகி வந்த ராஜேஷ் பிரித்தீவ் என்பவர் ஒரு லட்சம் திருடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிட்னி பிரச்சனையால் பாதிக்கப்பட்ட நடிகர் போண்டா மணிக்கு பல திரையுலக நட்சத்திரங்கள் நடிகர் தனுஷ், விஜய் சேதுபதி உட்பட பலர் உதவி வந்தனர்.
நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மருத்துவமனைக்கு சென்று தேவையான மருத்துவ உதவிகள் வழங்க உத்தரவிட்டார். நகைச்சுவை நடிகர் வடிவேலுவும் தன்னால் முடிந்த உதவிகளை செய்வதாக உறுதியளித்திருந்தார். இந்த நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்த போண்டா மணிக்கு உதவி செய்வது போல் ராஜேஷ் பிரித்தீவ் என்பவர் இருந்துள்ளார்.
2 கிட்னியும் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய போண்டா மணிக்கு மருந்து வாங்கி வர ஏடிஎம் கார்டை கொடுத்து ராஜேஷ்யை அனுப்பியுள்ளார். ஏடிஎம் கார்டை பெற்றுச் சென்ற ராஜேஷ் பிரித்தீவ் திரும்பி வராமல் சென்றுள்ளார்.
இதையடுத்து போலீசில் புகார் கொடுத்ததில் உதவி செய்வது போல் நடித்து ரூ.1 லட்சத்தை சுருட்டிய ராஜேஷ் பிரித்தீவ்வை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் போண்டா மணியின் ஏடிஎம் கார்டு மூலம் ரூ.1 லட்சத்திற்கு நகை வாங்கியதும் தெரியவந்தது.