ஒரே நாய்…. 5 பேரை தொடர்ந்து கடித்து குதறியதால் அச்சம்…. நாய்களை பிடிக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை….
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் மார்கெட் சாலையில் மீன் சந்தை, காய்கறி சந்தை, இறைச்சி கடை, உணவகங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் உள்ளன.
காலை முதல் இரவு வரை மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும், இவ்விடத்தில் தெரு நாய்கள் ஆங்காங்கு கிடைக்கும் உணவு பொருட்களை உண்பதற்காக கூட்டமாக செல்வதுண்டு.
இந்த நிலையில் காலை சந்தையில் காய்கறி வாங்குவதற்காக வந்த சுலோக்சனா (வயது 72), கோழிப்போர் விளையை சேர்ந்த சாந்தி (வயது 45) ஆகியோரை அங்கு தனியாக சுற்றி திரிந்த தெரு நாய் ஒன்று கடித்துள்ளது.
இதில் அவர்களுக்கு காலில் காயம் ஏற்பட்டு தக்கலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
இதனை தொடர்ந்து தக்கலையில் வசிக்கும் பள்ளி மாணவி ஸ்ரீனிகா (வயது 11) மாலை பள்ளி முடிந்து தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் தக்கலை மார்கெட் சாலையில் உள்ள ஒரு பழக்கடையில் பழம் வாங்குவதற்கு சென்றுள்ளனர்.
பினனர் மோட்டார் சைக்கிளை கடை முன்பு நிறுத்தி ஸ்ரீனிகாவை அதன் அருகில் நிற்குமாறு கூறிவிட்டு பழம் வாங்கி கொண்டிருந்த போது ஏற்கனவே இரண்டு பேரை கடித்து குதறிய அதே தெருநாய் மாணவி ஸ்ரீனிகாவின் வலது முழங்காலை கடித்து குதறியது. இதில் மாணவி ஸ்ரீனிகா பலத்த படுகாயம் ஏற்பட்டு அலறினார்.
உடனே மாணவியை மீட்ட அவரது தந்தை தக்கலை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். மாணவியின் கால் தசையை கடித்ததால் அவரது காலில் கட்டு போடப்பட்டது.
பின்னர் சரல்விளையை சேர்ந்த லிங்கம் (வயது 42) என்பரின் கையை கடித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிய நாய் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்த தக்கலையிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் பெத்தேல்புரத்தை சேர்ந்த ஜினி (வயது 35) என்பவரின் காலையும் கடித்துள்ளது.
இதில் காயம் ஏற்பட்ட இருவரும் தக்கலை அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
ஒரே நாளில் 5 பேரை கடித்து குதறிய தெருநாய் அப்பகுதியில் காணப்படுவதால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் வெறி நாயாக மாறியுள்ள இந்த தெரு நாயை பிடிப்பதோடு, பத்மநாபபுரம் நகராட்சி பகுதியில் காணப்படும் தெரு நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-பவானி கார்த்திக்