நகை வியாபாரியிடம் இருந்து கொள்ளையடித்து சென்ற வடமாநில கும்பல்..! சுற்றி வளைத்த போலீசார்..!
கோவையைச் சேர்ந்தவர் நகை வியாபாரி சுபாஷ் என்பவர் கடந்த 16ஆம் தேதி பெங்களூர் சென்று நகைகளை விற்பனை செய்து விட்டு அங்கிருந்து வசூல் செய்யப்பட்ட தங்கக் கட்டிகளையும் பணத்தை எடுத்துக் கொண்டு மும்பையில் இருந்து பெங்களூர் வழியாக கோவை செல்லும் குர்லா விரைவு வண்டியில் பெங்களூரில் இருந்து கோயமுத்தூருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார்.
இந்நிலையில் ரயில் திருப்பூரில் நின்று புறப்படும் பொழுது ரயிலில் பயணம் செய்து வந்த ஆறு இளைஞர்கள் சுபாஷ் இடம் தகராறு செய்துள்ளனர்.
தொடர்ந்து சுபாஷ் வைத்திருந்த பையை திருடிக் கொண்டு சென்று விட்டனர் பின்னர் சுபாஷ் சம்பவம் குறித்து இருப்புப் பாதை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் சுபாஷ் கொண்டு வந்த பையில் 595 கிராம் தங்க கட்டி மற்றும் 10 லட்சம் ரூபாய் பணம் இருந்ததால் இது தொடர்பாக சுபாஷ் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த திருப்பூர் இருப்பு பாதை காவல் நிலைய போலீசார் உடனடியாக தீவிர விசாரணையில் இறங்கினர்.
நான்கு தனிப்படைகள் அமைத்து தமிழ்நாடு கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் உள்ள ரயில் நிலையம் பேருந்து நிலையம் என 300-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை 400 மணி நேரம் ஆய்வு செய்து குற்றவாளிகள் பயன்படுத்திய செல்போன் சிக்னல் உள்ளிட்டவற்றையும் ஆய்வு செய்து வந்த நிலையில் குற்றவாளிகளான ஆறு நபர்கள் சேலம் புதிய பேருந்து நிலையத்தில் சுற்றி திரிந்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து குற்றவாளிகளை ரயில்வே பாதுகாப்பு படையினரும் இருப்புப் பாதை காவல்துறையினரும் சுற்றி வளைத்து விசாரணை மேற்கொண்டதில் நகை வியாபாரியிடம் இருந்து திருடி சென்ற நபர்கள் என தெரியவந்தது அதனை தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் கோவியைச் சேர்ந்த ஸ்வன்பானி சாவன்(22), விஜய் குண்டாலக் (20), அமர்பாரத்(20), அன்கீத் சுபாஷ்(23), சைதன்யா விஜய்(20), கவுரவ் மாரூதி(19) என்ற 6 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்த 595 கிராம் தங்க நகை மற்றும் 8 லட்சத்து 46 ஆயிரம் ரொக்கப் பணம் மற்றும் புதிதாக வாங்கிய 50 ஆயிரம் மதிப்புடைய செல்போன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
-பவானி கார்த்திக்