குட்மானிங் சொல்லாததால் அதிகாரத்தை காட்டிய தலைமை ஆசிரியர்..!! மருத்துவமனையில் மாணவன் அனுமதி…!!
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே காட்டாவூர் அரசினர் நடுநிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவன் கிரண் என்ற குழந்தையை பள்ளியின் தலைமை ஆசிரியை உஷாராணி என்பவர் கொடூரமாக தாக்கியதில் ஆம்புலன்ஸ் மூலம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் அனுமதி.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள காட்டாவூரில் அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளிக்கு உஷாராணி என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். நேற்று வழக்கம் போல் பள்ளிக்கு காட்டாவூர் சின்ன காலனி கிராமத்தை சேர்ந்த கிரண் என்ற எட்டாம் வகுப்பு பயிலும் மாணவன் வழக்கம் போல் பள்ளிக்கு காலை சென்றுள்ளான்.
பள்ளியில் மிகவும் நன்றாக பயிலும் மாணவனான கிரண் பள்ளியின் ஒழுக்கத்தில் சிறந்த மாணவன் என்பதால் பள்ளியில் முதல் மாணவனாக சென்று பள்ளிக்கு வரும் மற்ற மாணவர்களை வகுப்பில் அமரவைக்கும் ஸ்கூல் பீப்பிள்லீடர் பணியினை மேற்கொண்டு வந்துள்ளான்.
அப்பொழுது தலைமை ஆசிரியை உஷாராணி பள்ளிக்கு வருகை தந்து பள்ளிகேட் அருகே வந்துள்ளார். அவருடன் இரண்டு மாணவர்கள் பின்னால் வந்துள்ளனர். அவர்களை மாணவன் கிரண் ஏன் காலதாமதமாக வருகிறீர்கள் என கேட்டதற்கு உஷாராணிக்கு கோபம் தலைக்கு ஏறி உள்ளது.
எனக்கு வணக்கம் சொல்லாமல் காலதாமதமாக வந்ததற்காக ஏன் குழந்தைகளை கேட்கிறாய் எனக்கூறி கிரணை தலைமை ஆசிரியை அறைக்கு அழைத்து சென்று அங்கு கொடூரமாக தாக்கியுள்ளார்.
மாணவன் கிரண் மயங்கிய நிலைக்கு சென்ற போது மாணவனின் பெற்றோருக்கு தகவல் அளித்துள்ளார். அப்பொழுது மாணவனின் தாயார் நதியா என்பவர் என் குழந்தைக்கு ஏதாவது உடம்பு சரியில்லையா என கேட்டதற்கு அதெல்லாம் ஒன்றும் கிடையாது உடனடியாக நீங்கள் வரவேண்டும் என கட்டளையிட்டுள்ளார்.
அதன் பின்பு நதியா பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியர் அறைக்கு சென்று பார்த்தபோது மாணவன் கிரணுக்கு முகமெல்லாம் வீங்கி மயங்கிய நிலையில் இருந்துள்ளார். உடனடியாக ஆம்புலன்ஸுக்கு போன் செய்து குழந்தையை பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளார்கள்.
அங்கு மருத்துவர்கள் மாணவன் கிரணை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை மேற்கொண்டு வருகின்ற நிலையில் இந்த சம்பவம் குறித்து கிராம மக்கள் தகவல் அறிந்து உடனடியாக பள்ளியை முற்றுகையிட்டு தலைமை ஆசிரியை உஷாராணியை பள்ளியை விட்டு மாற்ற வேண்டும் என கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பள்ளி குழந்தைகளும் கிராமமக்களும் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்ததால் பொன்னேரி காவல்துறையினர் அந்த இடத்திற்கு சென்று சமாதான முயற்சியில் மேற்கொண்டு வருகின்றனர். தலைமை ஆசிரியை உஷாராணி என்பவர் ஏற்கனவே தத்தை மஞ்சி நடுநிலைப்பள்ளியில் இதே போன்று பிரச்சனை ஏற்பட்டு அங்கிருந்து இடமாற்றம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது..