பச்சிளம் குழந்தையை சாலையில் வீசிய கொடூரம்.. போலீஸ் விசாரணை..!
ஈரோடு மாவட்டம் ரங்கம்பாளையம் பகுதியில் நேற்று காலை 11.15 மணியளவில் 2 தனியார் திருமண மண்டபங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் சாலையோரமாக ஒரு பச்சிளம் குழந்தையின் அழுகை சத்தம் கேட்டுள்ளது.
இதனை கேட்ட அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனே அங்கு சென்று பார்த்தனர். அப்போது ஒரு கட்டை பையில் இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. அதனை எடுத்து பார்த்ததில் துணியால் கட்டப்பட்டு பிறந்த பச்சிளம் பெண் குழந்தை தொப்புள்கொடி கூட அறுக்கப்படாத நிலையில் கிடந்துள்ளது.
உடனே அங்கு வசிக்கும் பெண் ஒருவர் குழந்தையை தூக்கிக் கொண்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு குழந்தையின் தொப்புள் கொடியை கட்டி முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்ட பிறகு ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் தற்போது குழந்தை நலமாக உள்ளது. இந்த குழந்தை பிறந்து ஒரு நாள் ஆகி இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து தகவலிறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பச்சிளம் குழந்தையை உயிருடன் கட்டை பையில் வைத்து சாலையோரம் வீசி சென்றவர்கள் யார் என்று போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-பவானி கார்த்திக்