காதலியை போட்டோ வீடியோ எடுத்த காதலன் கொலை…!
திண்டுக்கல் மாவட்டம் மணப்பாறை சேர்ந்தவர் அன்பு(எ) புவனேஸ்வரன் (25). இவர் திருப்பூர் கணக்கம்பாளையம் பகுதியில் தங்கி பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவர் திருப்பூரைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவரை காதலித்து வந்ததுடன் அவருடன் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவை எடுத்து போனில் வைத்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மது அருந்தும் போது அன்பு அவருடைய நண்பரான தமிழரசனிடம் சிறுமியின் புகைப்படம், வீடியோக்களை காட்டியுள்ளார். அந்த புகைப்படம் வீடியோக்களை அன்புவிடமிருந்து பெற்ற தமிழரசன் சிறுமியின் தந்தைக்கு அனுப்பி பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவிநாசி காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். இந்த பிரச்சனை தொடர்வதை விரும்பாத சிறுமியின் தந்தை சுந்தர்ராஜன், தமிழரசனின் உதவியோடு அன்பு என்கிற புவனேஸ்வரனை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டியுள்ளார்.
தொடர்ந்து சுந்தர்ராஜன் மற்றும் தமிழரசனின் நண்பரான செல்லத்துரை மற்றும் அன்பு என்கிற புவனேஸ்வரன் ஆகியோர் நேற்று இரவு திருமுருகன்பூண்டி பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் மது அருந்தி உள்ளனர். அப்போது செல்லத்துரை அன்புவிடம் பிரச்சினைகளை பேசி தீர்த்துக் கொள்ளலாம் எனவும், பிரச்சனைகள் தீர்ந்தவுடன் செல்போனிலிருந்து படங்கள் மற்றும் வீடியோக்களை அழித்து விட வேண்டும் எனவும் கூறி திருப்பூர், காந்திநகர் அருகே உள்ள ஏ.வி.பி லே அவுட்டில் உள்ள அங்கயர் செல்வன் என்பவரின் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
அங்கு காரை நிறுத்தி விட்டு முதலில் செல்லத்துரை இறங்கி பின்பு அன்புவை இறங்கி வருமாறு கூறியுள்ளார். செல்லத்துறையை நம்பிய அன்பு காரிலிருந்து இறங்கியதும் அங்கையர் செல்வனின் வீட்டில் பதுங்கி இருந்த எட்டு பேர் கொண்ட கும்பல் அன்பு என்கிற புவனேஸ்வரனை துரத்தி துரத்தி சரமாரியாக கழுத்து, முகம், தலை, கை ஆகிய பகுதிகளில் வெட்டி சாய்த்துள்ளனர்.
அதில் அன்பு என்கிற புவனேஸ்வரன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வடக்கு துணை கமிஷனர் இராசராசன், உதவி கமிஷனர்கள் நல்லசிவம், அணில் குமார் ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து சிறுமியின் தந்தையான சுந்தர்ராஜன் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் கொலை செய்து விட்டு தப்பி ஓடிய குற்றவாளிகளை பிடிப்பதற்காக ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
– லோகேஸ்வரி.வெ