சென்னை மாநகராட்சி சார்பில் மழை வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான பாராட்டு விழா சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது.
இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, மழைக்காலத்தில் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களை பாராட்டினார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், பருவமழையின் போது ஏற்பட்ட வெள்ள சேதங்களால் பொதுமக்கள் பாதிக்கப்படாதவாறு சென்னை மாநகராட்சி, பொதுப்பணித்துறை, மின்சார துறை போன்ற பல்வேறு துறைகளை சேர்ந்த ஊழியர்கள் குறிப்பாக தூய்மை பணியாளர்கள் போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொண்டதாக பெருமிதம் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர், இனிவரும் காலங்களில் சென்னை மாநகரில் மழை நீரை தேங்காத நிலை ஏற்பட்டு மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு அரசு அனைத்து நடவடிக்கையும் மேற்கொண்டு இருப்பதாக தெரிவித்தார்.
மேலும் அரசு ஊழியர்கள் என்பவர்கள் மக்களுக்கு சிறப்பான சேவையை தொய்வின்றி மக்கள் பாராட்டும் வகையில் பணிகளை உடனுக்குடன் வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்ட முதலமைச்சர், எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதே திராவிட மாடல் ஆட்சியின் குறிக்கோள் என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர் பாபு, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் திப் சிங் பேடி, மேயர் பிரியா என பலர் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து தூய்மை பணியாளர்களுடன் , முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமர்ந்து உணவருந்திய நிகழ்வு அங்கு இருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.