5.75 கோடி மதிப்பீட்டில் அறிவியல் பூங்கா..!! எங்க தெரியுமா..?
இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் இன்று பெரம்பூர் முரசொலி மாறன் பூங்காவில் பெருநகர சென்னை மாநகராட்சி மூலதன நிதி ரூ.5.75 கோடி மதிப்பீட்டில் அறிவியல் பூங்கா (Stem Park) அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கி வைத்துப் பார்வையிட்டு அலுவலர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள், வார்டு-74க்கு உட்பட்ட ஏகாங்கிபுரம் முதல் தெருவில் மேயர் அவர்களின் மேம்பாட்டு நிதி 50 இலட்சம் மதிப்பீட்டில் நவீன உடற்பயிற்சி கூடம் அமைக்கும் பணி மற்றும் மூலதன நிதி ரூ. 28.29 இலட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கி வைத்தார்.
முன்னதாக, வார்டு-74க்குட்பட்ட பெரம்பூர் சேமாத்தம்மன் திருக்கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.52 இலட்சம் மதிப்பீட்டில் திருக்கோயில் மண்டபம் அமைக்கும் பணிக்கு அமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சிகளில், மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா, திரு.வி.க.நகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.தாயகம் கவி, மத்திய வட்டார துணை ஆணையர் திரு. கே.ஜே. பிரவீன் குமார், இ.ஆ.ப., மண்டலக்குழுத் தலைவர் திருமதி சரிதா மகேஷ்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.