கொலை மிரட்டல் கொடுத்த ரேபிடோ பைக் டிரைவர்…!! அதிர்ச்சி சம்பவம் சென்னையில்..!!
சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பைக் டாக்சி பிரபலமாகி உள்ளது. கார், ஆட்டோ என்றால் விலை அதிகமாகவும் டிராபிக்கிலும் மாட்டிவிடுவோம். ஆனால் பைக் என்றால் டிராபிக்கிலும் சென்றுவிடலாம். விலையும் குறைவாகவே இருக்கும்.
லக்கேஜ் இல்லாமல் தனியாகப் பயணிக்கும் பலரும் பைக் டாக்ஸியையே விரும்பி பயன்படுத்துகிறார்கள். முன்பு ஆண்கள் மட்டுமே இதைப் பயன்படுத்தினாலும் இப்போது இதைப் பெண்கள் பயன்படுத்துவதும் அதிகரித்துள்ளது.
பரவலாக பைக் டாக்சி பயணங்களில் பெண்கள் எந்தவொரு பிரச்சினைகளையும் எதிர்கொள்வதில்லை. இருப்பினும் சில நேரங்களில் பைக் டாக்சி டிரைவர்கள் பயணிக்கும் பெண்களிடம் தவறாக நடந்து கொள்ளும் அதிர்ச்சி சம்பவங்களும் நடக்கிறது. அப்படியொரு அதிர்ச்சிசம்பவம் தான் இப்போது சென்னையில் நடந்துள்ளது.
சென்னை அடையாறு பகுதியில் குடியிருக்கும் 22 வயது பெண் ஒருவர் கடந்த 19ஆம் தேதி தனது மொபைல் மூலம் ரேபிடோ பைக் டாக்சியை புக் செய்துள்ளார். கிண்டியில் இருந்து கொட்டிவாக்கம் வரை செல்ல பைக் டாக்ஸியை புக் செய்துள்ளார்.
கொட்டிவாக்கம் செல்லும் வரை எந்தவொரு பிரச்சினையும் ஏற்படவில்லையாம். ஆனால், அந்த பெண்ணை இறக்கிவிட்ட பிறகு ஓட்டுநரின் செயல்பாடுகள் மாறியுள்ளது. பைக்கில் இருந்து இறக்கிவிட்ட பிறகு ரேபிடோ பைக் டிரைவர் பெண்ணிடம் அத்துமீறி நடந்து கொண்டுள்ளார்.
இதனால் அச்சத்தில் ஆழ்ந்த பெண் உடனடியாக அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளார். இருப்பினும், அவரை விடாமல் பின்தொடர்ந்த அந்த ஓட்டுநர், பெண்ணுக்குக் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இதை யாரிடமாவது கூறினால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டிவிட்டுக் கிளம்பி இருக்கிறார்.
ஆனால் அந்த பெண் துணிச்சலாக இந்தச் சம்பவம் குறித்து நீலாங்கரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணையை ஆரம்பித்தனர். போலீஸ் விசாரணையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது நடனசபாபதி என்பதும் அவர் குன்றத்தூரை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்ததுள்ளது.
இதையடுத்து உடனடியாக போலீசார் அந்த நபரைக் கைது செய்தனர். மேலும், செல்போன் மற்றும் அவரது பைக் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். ஓட்டுநரை கைது செய்த போலீசார், விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.