இ-பாஸ் இருந்தால் மட்டுமே இனி அங்கே செல்ல முடியும்…!! அதிர்ச்சியில் சுற்றுலா பயணிகள்..!!
கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளின் வாகன எண்ணிக்கை கட்டுப்பாடுகள் கொண்ட இ-பாஸ் நடைமுறை துவக்கம்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் அதீத வாகனங்கள், தொடர் விடுமுறை காலங்கள் மற்றும் கோடை விடுமுறை பருவ காலங்களில் குவிவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சுற்றுலாப் பயணிகள் அவதியுறும் நிலை கடந்த 10 ஆண்டுகளாக உள்ளது.
இதனைத் தொடர்ந்து உயர்நீதிமன்றம் மலைப்பகுதிகளில் அமைந்துள்ள கொடைக்கானல் மற்றும் ஊட்டி போன்ற பகுதிகளுக்குச் செல்ல, இ- பாஸ் நடைமுறையை செயல்படுத்தி வாகனங்கள் எவ்வளவு வருகிறது என்ற கணக்கீட்டை கடந்த ஒரு வருடங்களாக எடுக்க மாவட்ட நிர்வாகங்களை வலியுறுத்தியது.
அதன் அடிப்படையில் கடந்த ஏப்ரல் மாதம் முதல், இந்த ஆண்டு மார்ச் மாதம் முடிய, எண்ணிக்கை கட்டுப்பாடுகள் இல்லாத இ-பாஸ் நடைமுறை செயல்படுத்தப்பட்டு, வானங்கள் உள்வரும் அளவுகளை மாவட்ட நிர்வாகம் கணக்கில் எடுத்தது.
அதன் தகவல் அடிப்படையில் தற்போது வார நாட்களில் நாள் ஒன்றுக்கு நான்காயிரம் வாகனங்கள் எனவும், வார இறுதி நாட்களான சனி, ஞாயிறு தினங்களில் நாள் ஒன்றுக்கு 6000 வாகனங்கள் எனவும் எண்ணிக்கை கட்டுப்பாடுகளை கொண்ட இ-பாஸ் நடைமுறை இன்று முதல் அமல்படுத்தப்பட உள்ளது.
கொடைக்கானலுக்கு செல்லும் பிரதான சாலையான வத்தலக்குண்டு, கொடைக்கானல் சாலையின் தேனி மாவட்ட எல்கையான காமக்காப்பட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடியில் கொடைக்கானல் செல்லும் வாகனங்கள் அனைத்தும் இ-பாஸ் பெறப்பட்டுள்ளதாக பரிசோதனை செய்த பின்பு அனுமதிக்கப்பட்டு வருவதோடு,
இ-பாஸ் எடுக்காத வாகனங்கள் அந்த பகுதியிலே நிறுத்தி இ-பாஸ் எடுத்த பின்பு கொடைக்கானல் செல்ல கொடைக்கானல் நகராட்சி நிர்வாகம் அனுமதித்து வருகின்றனர். இதனால் இ-பாஸ் எடுத்த வாகனங்கள் மட்டுமே கொடைக்கானல் செல்லும் நிலை உள்ளது குறிப்பிடத்தக்கது..