நீட் வினாத்தாள் கசிவு…! மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி..!
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 5-ம் தேதி நடந்தது. அதன் முடிவுகள், கடந்த மாதம் 4-ம் தேதி வெளியிடப்பட்டன. நீட் தேர்வில் மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது. வினாத்தாள் கசிவு. வினாத்தாள் விற்பனை.
67 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றது போன்ற முறைகேடுகளும் நடந்ததாக பேசப்பட்டது. எனவே, நீட் தேர்வை ரத்து செய்து, மறுதேர்வு நடத்தக்கோரி, உச்சநீதிமன்றத்தில் மாணவர்கள், பெற்றோர் என பலதரப்பினரும் மனுக்கள் தாக்கல் செய்தனர். ஆனால், நீட் தேர்வை ரத்து செய்யக்கூடாது என்று மத்திய அரசும், தேசிய தேர்வு முகமையும் பதில் மனு தாக்கல் செய்துள்ளன.
இந்நிலையில், நீட் தேர்வு தொடர்பான 38 மனுக்களும். உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீட் தேர்வு வினாத்தாள் செல்போன் மூலம் கசிந்துள்ளது. பள்ளிகளில் பிரிண்டர்களில் பிரிண்ட் அவுட் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த மே 4ம் தேதி டெலிகிராம் சேனலில் நீட் வினாத்தாள், அதன் விடைகளுடனான வீடியோ வெளியிடப்பட்டது என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து பேசிய நீதிபதி, சிபிஐ விசாரணைக்கு பிறகு எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன?, நீட் தேர்வின் ஒட்டுமொத்த நடைமுறைகளையும் அறிய விரும்புகிறோம் என பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.
மேலும் வினாத்தாள் கசிவு குறித்து சிபிஐ, தேசிய தேர்வு முகமை வரும் 10ம் தேதிக்குள் பதிலை தாக்கல் செய்ய வேண்டும். இதில் தவறிழைத்தவர்கள் கண்டறியப்பட்டால் 23 லட்சம் மாணவர்களுக்கு மறுதேர்வு தேவையில்லை. ஆனால் தவறிழைத்தவர்கள் கண்டறியப்படாவிடில் மறுதேர்வு நடத்தப்படும் என உச்ச நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.
-லோகேஸ்வரி.வெ