ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் வேப்பங்கொட்டை மூலம் கிடைக்கின்ற வருமானம் விவசாயிகளுக்கு அதிக அளவில் கைகொடுப்பதால், கிராமங்களில் வேப்ப மரங்களில் இருந்து விழுகின்ற, வேப்பம் பழங்களை சேகரித்து விற்பனை செய்வதில் கிராமத்தினர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கடந்தாண்டை போல இந்தாண்டும் வேப்பங்கொட்டைக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது. ஒரு கிலோ ரூ.120க்கு விற்பனையாகி வருகிறது. இதனால் வேப்பங்கொட்டை சேகரிப்பு பணியில் கிராம மக்கள் ஆர்வமாக ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வாரம் வரை கிலோவுக்கு ரூ.130க்கு வரை விற்பனையாகி வந்த வேப்பங்கொட்டை தற்போது வரத்து அதிரிப்பின் காரணமாக ரூ.10 குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
நாள் ஒன்றிற்கு 3 கிலோ வரை கிடைப்பதால் குடும்பச் செலவிற்கு தேவையான பணம் கிடைப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். கடந்த இரண்டு மாதங்களில் ராமநாதபுரம் மாவட்டத்தில் சுமார் 300 டன், சிவகங்கையில் 350 டன், விருதுநகரில் 150 டன் என மொத்தம் 800 டன் வேப்பங்கொட்டைகள் மொத்த வியாபாரிகள் மூலம் உரம் தயாரிப்பு கம்பெனிகளுக்கு விற்கப்பட்டுள்ளது. இதனால் ரூ.8 கோடிக்கு மேல் வர்த்தகம் நடந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.