கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் இந்திராநகர் பகுதியில் வசித்து வருபவர் ஏசுதாசன். இவரது மனைவி அனிட்டா. இவருக்கு வயது 46. இவர்களுக்கு 19 மற்றும் 16 வயதில் 2 மகள்கள் உள்ளனர். இவருடைய கணவர் 10 ஆண்டுகளுக்கு முன்பே இறக்கவே 2 மகள்களையும் அனிட்டா வளர்த்து வந்த நிலையில் மூத்த பெண் கல்லூரியிலும், 2வது மகள் 11ம் வகுப்பும் படித்து வந்தனர். நேற்று முன்தினம்இரவு வழக்கம் போல 3 பேரும் சாப்பிட்டு விட்டு தூங்க சென்ற நிலையில் நேற்று வெகுநேரமாகியும் கதவு திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனைக் கவனித்த அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அனிட்டாவும், அவரது 2 மகள்களும் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் தாய் மற்றும் 2 மகள்களின் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 2 மகள்களையும் தூக்கில் தொங்கவிட்டு கொன்று, அதன் பிறகு அனிட்டா தற்கொலை செய்து இருக்கலாம் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து அனிட்டா எழுதிய கடிதம் காவல்துறையினர் கைப்பற்றினர். அதில் தனக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் மகள்களை சரிவர கவனிக்க முடியவில்லை.இதனால் ஏற்பட்ட மனவருத்தத்தில் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்கிறோம். மூவரின் சாவுக்கு வேறுயாரும் காரணமில்லை எனவும் எழுதியிருந்தது. அந்த கடிதத்தின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
அனிட்டா கணவர் இறந்த பிறகு மகள்களை கஷ்டப்பட்டு படிக்க வைத்துள்ளார். சமீபநாட்களாக பணப்பிரச்சனை அதிகரித்த நிலையில் இதனால் அவர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பருவ வயது மகள்களை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.