கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு..!! சிபிஐக்கு மாற்றம்…!!
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கை சிபிஐ விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த ஜூன் 19-ஆம் தேதி மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் அருந்தி 229 போ் உடல் நலம் பாதிக்கப்பட்டனா். இவா்களில் 68 போ் உயிரிழந்தனா். 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
கள்ளச்சாராய மரண வழக்கு தொடர்பாக 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்பட்ட மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை விற்பனை செய்ததாக கண்ணுக்குட்டி (எ) கோவிந்தராஜன், அவரது மனைவி விஜயா, மாதேஷ், ராமர் உள்ளிட்ட 11 பேரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அந்த விசாரணைக்கு நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.. அதனை தொடர்ந்து தற்போது கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில் ஷாகுல் ஹமீது, பென்சிலால், கதிரவன், சின்னதுரை ஆகிய 4 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இது தொடா்பாக சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுக்கள் விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், பி.பி. பாலாஜி அமர்வு உத்தரவிட்டது . சிபி சிஐடியிடம் உள்ள விசாரணை ஆவணங்களை சிபிஐ வசம் வழங்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்….