வீட்டு பணியாளர்களை கொத்தடிமை போல் நடத்திய ஹிந்துஜா குடும்பம்..! பணியாளர்களுக்கு நடந்த கொடுமை..!
பிரிட்டனில் மிகவும் பணக்காரர்கள் வம்சத்தை சேர்ந்த ஹிந்துஜா குடும்பம் மீது ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது..
அதாவது ஸ்விட்சர்லாந்தில் உள்ள அவர்களது மாளிகையில், வீட்டுப் பணியாளர்களை துன்புறுத்தியதாகவும் தவறாக நடத்துவதாகவும் மனிதக் கடத்தல் வழக்கு கீழ் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் பணிப்பெண் தரப்பு வழக்கறிஞர் வாதிட்ட போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது…
ஹிந்துஜா குழுமம் என்பது இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் உள்ள மிகப்பெரிய வணிக குழுமம் ஆகும். இந்தியாவில் அசோக் லேலண்ட், இன்டஸ்இண்ட் பேங்க் , ஹிந்துஜா குளோபல் சொல்யூஷன்ஸ், லிமிடெட், ஹிந்துஜா லேலண்ட் ஃபைனான்ஸ் லிமிடெட் உள்பட பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறது.
ஆட்டோமொபைல், வங்கி, ஐடி, சுகாதாரம், பொழுதுபோக்கு, ரியல் எஸ்டேட் என பல துறைகளில் ஹிந்துஜா குழுமம் செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனங்களில் பல்லாயிரம் பேர் பணியாற்றுகின்றனர். 37க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த நிறுவனங்களின் கிளைகள் உள்ளது என்பது குறிப்பிடதக்கது.
ஹிந்துஜா குடும்ப உறுப்பினர்களான பிரகாஷ் மற்றும் அவரது மனைவி கமால், அவரது மகன் அஜய் மற்றும் அவரது மனைவி நம்ரதா சுவிட்சர்லாந்தில் வசித்து வருகிறார்கள்,
இவர்கள் சட்டவிரோதமாக தங்கள் வீட்டில் இந்திய வேலையாட்களை பணியமர்த்தி வருவதாக புகார் எழுந்துள்ளது.
மேலும் சுவிட்சர்லாந்தில் பணியமர்த்தப்பட்ட இந்திய பணியாளர்களுக்கு குறைந்த ஊதியம் வழங்கி அதிக மணி நேரம் வேலை செய்ய மிரட்டுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அது தொடர்பான வழக்கு சுவிட்சர்லாந்து நீதிமன்றத்தில் கடந்த திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆஜராகிய எதிர்த்தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், “ஹிந்துஜா குடும்பத்தினர் தங்கள் வீட்டு வளர்ப்பு நாய்க்கு நாள் ஒன்றுக்கு இந்திய மதிப்பில் 2,500 ரூபாய் (23.51பிராங்க்) செலவு செய்கின்றனர்.
ஆனால் தங்கள் வீட்டில் பணியாற்றும் இந்திய வீட்டுப் பெண் பணியாளருக்கு நாளொன்றுக்கு 18 மணி நேரம் வேலை செய்வதற்கு ரூ.660 ( 7 பிராங்க் ) மட்டுமே வழங்குகின்றனர்.
ஊழியர்களின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்து அவர்களை மிரட்டி வேலை வாங்கி வருகிறார்கள். இத்தகைய சட்டவிரோத செயலில் ஈடுபட்டுள்ள இவர்களுக்கு 4 ஆண்டு முதல் 5 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்க வேண்டும்.
மேலும் வழக்கு செலவுக்காக 1 மில்லியன் பிராங்க்ஸும், கொடுமைப்படுத்தப்பட்ட பணியாளருக்கு நஷ்ட ஈடாக 3.5 மில்லியன் பிராங்க்ஸும் வழங்க வேண்டும்” என்று வாதிட்டார். இதனை ஹிந்துஜா குடும்பம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
முன்னதாக தாங்கள் கடுமையாக துன்புறுத்தப்பட்டதாக, வீட்டுப் பணியாளர்கள் அளித்த புகாரில் விசாரணை நடந்தது. எனினும் பின்னர் வீட்டு பணியாளர்கள் சமாதானமாகச் சென்றதாகக் கூறப்பட்ட ஒரு சில நாள்களுக்குப் பின்னர், மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
– லோகேஸ்வரி. வெ