உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்க சிறப்பு குழு அமைத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி ரஷ்யா உக்ரைன் மீது தொடர்ந்து 8வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் கார்கிவ் நகரில் ரஷியா ஆயுதம் ஏந்திய வாகனங்கள் மற்றும் பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனால் அங்கு பெரும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அங்கு ஏராளமான இந்திய மாணவர்கள் சிக்கி தவித்து வருகின்றனர். இதில் தமிழக மாணவர்களுக்கும் சிக்கியுள்ளனர். இதையடுத்து, உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்க சிறப்பு குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
உக்ரைனில் உள்ள தமிழக மாணவர்களை மீட்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் அலுவலர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கிய முதலமைச்சர் இந்திய தூதர்களுடன் ஒருங்கிணைந்து மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள தமிழக எம்.பி.க்கள் திருச்சி சிவா, கலாநிதி வீராசாமி, எம்.எம்.அப்துல்லா மற்றும் சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்டோர் அடங்கிய குழுவை அமைத்து உத்தரவிட்டார்.
மேலும், இந்த சிறப்பு குழுவில் 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் மீட்பு பணியில் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்வர் என்றும் தெரிவித்துள்ளார்.
உக்ரைனின் மேற்கு பகுதியில் அதிகமான மாணவர்கள் தங்கியிருப்பதால், அவர்களை ரஷ்ய எல்லை வழியாக அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதுவரை உக்ரைனில் இருந்து தமிழ்நாட்டை சேர்ந்த 193 மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
Discussion about this post