சென்னை அண்ணாநகரில் தனியார் வங்கி மற்றும் அலுவலகங்கள் செயல்பட்டு வரும் அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சென்னை அண்ணா நகர் 5-வது அவென்யூவில் உள்ள 5 மாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தின் தரை தளத்தில் தனியார் வங்கியும், மற்ற தளங்களில் பல ஐடி நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இந்த கட்டிடத்தின் முதல் மாடியில் இயங்கி வரும் ஐடி கம்பெனி மற்றும் இரண்டாவது மாடியில் உள்ள இந்தியா புல்ஸ் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் ஆகிய அலுவலகங்களில் இன்று(மார்ச்.16) பகல் நேரத்தில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து, உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதற்கிடையில்,தீ விபத்து ஏற்பட்ட உடன் பெரும்பாலானவர்கள் கட்டிடத்தில் இருந்து வெளியேறிய நிலையில், ஊழியர்கள் யாரேனும் தீ விபத்தில் சிக்கியிருந்தால், அவர்களை மீட்கவும் தனியாக குழு அமைக்கப்பட்டது. இதனால் அங்கு பெரும் ஆசம்பாவிதத்தை தடுக்க முடிந்தது.
இதையடுத்து, தீக்குள் சிக்கியவர்களை பத்திரமாக மீட்டு, உதவிய தீயணைப்புத் துறை அதிகாரிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், விபத்து ஏற்பட்ட கட்டடம் அருகே உள்ள தனியார் மருத்துவமனை, அலுவலகங்களில் பணி புரியும் ஊழியர்கள் ஒன்றிணைந்து மூன்று முறை கைகளை தட்டி நன்றி கூறி ஆரவாரம் செய்து வாழ்த்து தெரிவித்து வழி அனுப்பி வைத்தனர்.
Discussion about this post