வரதட்சணையாக இருட்டுக்கடை அல்வா உரிமை… நெல்லை கமிஷனர் அலுலகத்தில் பரபரப்பு புகார்‘
‘
மனைவியுடன் சேர்ந்து வாழ்வதற்கு இருட்டுக்கடையை தனக்கு உரிமையானது என எழுதித் தர வேண்டுமென்று கணவர் மிரட்டுவதாக நெல்லை போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நெல்லை இருட்டுக் கடை உரிமையாளர் கவிதாசிங்கின் மகள் கனிஷ்கா நெல்லை கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது, ‘நான் எனது பெற்றோருடன் குடியிருந்து வருகிறேன். எனக்கும் கோயம்புத்தூரை சார்ந்த பல்ராம் சிங் என்பவருக்கும் இந்த ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி தாழையுத்துவிலுள்ள அமோகா பேர்ல்ஸில் வைத்து திருமணம் நடைபெற்றது .
திருமணத்திற்கு பிறகு எனது கணவருடன் கோயம்புத்தூரில் உள்ள கணவரின் வீட்டில் வசித்து வந்தேன் . எனது கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்துக்கொண்டு அவரை அடிக்கடி வீட்டிற்கு அழைத்து வருவதுமாக இருந்து வந்தார் .இது சம்பந்தமாக நான் எனது பெற்றோரிடம் கூறினால் , என்னை கொன்று விடுவதாக தொடர்ந்து மிரட்டி வந்தார். இதனால் நான் கடும் மனவேதனை அடைந்து, கடந்த மார்ச் 15ம் தேதி எனது பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டேன்.‘
பின்னர் , அடுத்த நாள் இரவு 8 மணியளவில் எனது கணவரும் அவரின் பெற்றோரும் எனது வீட்டிற்கு வந்து எனது பெற்றோரிடம் சமாதானம் பேசினர் . என் மகன் உங்கள் மகளுடன் நல்ல முறையில் வாழ வேண்டும் என்றால் கூடுதலாக வரதட்சணை தர வேண்டும் மற்றும் திருநெல்வேலியில் இயங்கிக் கொண்டிருக்கும் இருட்டுக்கடை அல்வாவை எனது மகன் பெயருக்கு எழுதி தர வேண்டும் . இல்லையென்றால் எனது மகன் உங்கள் மகளுடன் வாழ மாட்டான் என்று மிரட்டி சென்றனர். எனது பெற்றோர்களும் எனது எதிர்காலத்தை கருதி இந்த விஷயத்தை யாரிடம் கூறாமல் இருந்து வந்தனர். பின்னர், வாட்ஸப்பில் தேவையற்ற அநாகரிகமான குறுஞ்செய்திகளை அனுப்புவதும் குறுஞ்செய்திகள் மூலம் எங்களை மிரட்டினர். இதனால், எனது உயிருக்கும் எனது பெற்றோரின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது . அதனால், எனது கணவர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.’
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.