நாளை மறுநாள் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் நிலையில் அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகள் பலரும் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொதுக்குழு கூட்டத்திற்கான ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்து வருகிறார்.
அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர்பாபு, எம்.பி கலாநிதி வீராசாமி உள்ளிட்டோரும் அவருடன் சென்றனர். மேலும் திமுக கட்சியின் தலைவர் பதவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
திமுகவின் 15 வது உட்கட்சி தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து தி.மு.க. தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகியோரை தேர்ந்தெடுக்க வரும் 9ஆம் தேதி பொதுக்குழு கூடுகிறது. சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள புனித ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.
இதில் தி.மு.க. தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர், 4 தணிக்கை குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர். இந்த பதவிகளுக்கு போட்டியிட விரும்புபவர்கள் இன்று அறிவாலயத்தில் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று தி.மு.க. தலைமை கழகம் அறிவித்துள்ளது.
தற்போது தி.மு.க. தலைவராக உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் கட்சித் தலைவர் பதவிக்கு இரண்டாவது முறையாக போட்டியிட மனு தாக்கல் செய்ய உள்ளார்.
Discussion about this post