பாமாகவுக்கு நோட்டீஸ் அனுப்பிய திமுக எம்.எல்.ஏக்கள்…! மன்னிப்பு கேட்கணும் இல்லைனா..?
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி இதுவரை 56 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது. இந்நிலையில், கள்ளச்சாராய மரணம் குறித்து அவதூறான கருத்துக்களை பதிவிட்ட பாமாக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் மற்றும் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் வழக்கறிஞர் சார்பில் அவதூறு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு :
அந்த நோட்டீஸில் அவர்கள் குறிப்பிட்டிருப்பதாவது, “ஜூன் 19 மற்றும் 20ம் தேதி கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த விஷ சாராயம் அருந்தி ஏராளமானோர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அலட்சியமாக செயல்பட்ட மாவட்ட ஆட்சியர் இடமாற்றமும், காவல் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
அதன் பின், தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராயம் விற்பனை செய்தவர்கள் உடனடியாக கைது செய்யவும் உத்தரவிட்டனர். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரண தொகையும், பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 5 லட்சம் ரூபாய் வங்கியில் வைப்பு தொகையாகவும் மாதம் 5000 ஆயிரம் ரூபாய் உதவி தொகையாகவும் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் :
இப்படி இருக்க, பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இணைந்து வெளியிட்ட அறிக்கையில், சட்டமன்ற உறுப்பினர்கள் உதயசூரியன் மற்றும் வசந்தம் கார்த்திகேயன் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை கட்டுப்படுத்தியதாகவும், சாராயம் விற்பனை செய்ய துணை புரிந்ததாகவும், அறிவிக்கப்படாத முதலமைச்சராக செயல்படுவதாகவும், கள்ளக்குறிச்சியில் 30 ஆயிரம் பேர் கள்ளச்சாராயம் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் அரசியல் ஆதாயத்திற்கு ஆதாரமற்ற அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
கள்ளச்சாராயம் தமிழ்நாட்டில் அதிகமாக இருக்கிறது என்றால், ஏன் இதுவரை புகார் அளிக்கவில்லை. அவர்களைக் காப்பாற்ற முயல்வது குற்றம் எனத் தெரியாதா..? விசாரணை அதிகாரிகளிடம் சாட்சியாக நேரில் ஆஜராகி கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர்களின் பெயர் மற்றும் விவரங்களை அளிக்கலாம்.
அதனால், உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிட்ட இருவரும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில், முதலமைச்சர் நிவாரண நிதிக்காக 1 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்க வேண்டும். அப்படி செய்யத் தவறினால், சட்டபடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
– லோகேஸ்வரி.வெ