முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அசத்தல் திட்டங்கள்..! இனி தமிழ்நாடு..!
கண்மாய்கள், குளங்கள், ஏரிகள், நீர்த்தேக்கங்கள், கால்வாய்களில் இருந்து விவசாய பயன்பாட்டுக்கும், பானைத் தொழில் செய்யவும் கட்டணம் இல்லாமல் மண், வண்டல் மண், களிமண் வெட்டி எடுக்க அந்தந்த வட்டாட்சியரிடமே இணையவழியில் அனுமதி பெறும் புதிய நடைமுறை அமல்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அரசு வெளியிட்டள்ள செய்திக்குறிப்பில், பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை பராமரிப்பில் உள்ள கண்மாய்கள், குளங்கள், ஏரிகள், நீர்த்தேக்கங்கள், கால்வாய்களிலிருந்து விவசாயப் பயன்பாட்டுக்கும் மற்றும் பானைத் தொழில் செய்யவும் மண், வண்டல்மண், களிமண் எடுக்க மாவட்ட ஆட்சியர்களால் அனுமதி அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
கடந்த இரண்டு ஆண்டுகளில் இருந்த நல்ல மழைப்பொழிவால் நீர்த்தேக்கங்கள் மற்றும் ஏரிகளில் நீர் தேங்கி இருந்தநிலையில், விவசாயிகள், மண்பாண்டம் செய்பவர்கள் போன்றோர் மண் எடுத்து பயன்பெற முடியாத சூழ்நிலை இருந்ததாகவும் தற்போது இந்த நீர் நிலைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால், இவற்றை தூர்வாரி, கொள்ளளவை உயர்த்தினால், வரும் மழைக்காலத்தில் அதிக அளவு மழை நீரை சேமிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் சிறுகனிம விதிகளில் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, பொதுப்பணித் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை பராமரிப்பில் உள்ள கண்மாய்கள், குளங்கள், ஏரிகள், நீர்த்தேக்கங்கள், மற்றும் கால்வாய்களிலிருந்து கட்டணம் இல்லாமல் விவசாயப் பயன்பாட்டுக்கும் மற்றும் பானைத் தொழில் செய்வதற்கும் மண் எடுக்க சம்மந்தப்பட்ட வட்டாட்சியர்களே இணைய வழியில் அனுமதி வழங்கும் வகையில் புதிய நடைமுறை செயல் படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இது மட்டுமன்றி, விவசாயிகள் தாம் வசிக்கும் வட்டத்தில் உள்ள எந்த ஒரு நீர்நிலையிலும் தேவைப்படும் மண்ணை எடுத்துக் கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..
– லோகேஸ்வரி.வெ