தொடரும் ரூட் தல பிரச்சனை..! பட்டா கத்தியுடன் 3 மாணவர்கள் கைது..! பரபரப்பான வேப்பேரி..!
சென்னை திருவொற்றியூரில் இருந்து கோயம்பேடு வரை செல்லக்கூடிய 159A மாநகர பேருந்து இன்று டவுட்டனை அடுத்து வந்து கொண்டிருந்தது.., அப்போது, வேப்பேரியில் சில பள்ளி மாணவர்கள் மாநகர பேருந்தில் ஏறி பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் படிக்கட்டில் தொங்கிக் கொண்டும், மாநகரப் பேருந்தின் மேற்கூரை மீது ஏறியும் அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், கல்லூரி மாணவர்களைப் போல “ரூட்டு தல” என கூச்சலிட்டு கானப் பாடல் படிக்கொண்டும் பள்ளி மாணவர்கள் கூச்சலிட்டு கொண்டே வந்ததால் பேருந்தை ஓட்டுனர் நிறுத்தியுள்ளார். உடனே அராஜகத்தில் ஈடுபட்ட அனைத்து மாணவர்களும் தப்பிச் சென்றதாக தெரிகிறது.
பேருந்தில் பள்ளி மாணவர்கள் அராஜகத்தில் ஈடுபடக்கூடிய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரவி வருகிறது. இந்த வீடியோ காட்சிகளை வைத்து வேப்பேரி போக்குவரத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல, “ரூட்டு தல” பிரச்சனை முன் விரோதம் காரணமாக பட்டாக்கத்தியுடன் காத்திருந்த மாநில கல்லூரி மாணவர்கள் 3 பேரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.
பின்னர் கைது செய்த 3 மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் விசாரணையில், அவர்கள் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில், தண்டையார்பேட்டை, மிஞ்சூரை சேர்ந்த 3 பேர் என்பதும் அவர்கள் பச்சையப்பன் கல்லூரி மாணவர் ஒருவரை வெட்டுவதற்காக பட்டாக்கத்தியுடன் சுற்றி திரிந்ததும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
அதையடுத்து 3 மாணவர்கள் மீதும் ஆயுத தடை சட்டம் உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கைதான 3 மாநில மாணவர்களுக்கும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கிடையே அடிக்கடி “ரூட் தல” பிரச்சனையில் மோதி கொள்வது வழக்கம்.
அதன் முன் விரோதம் காரணமாக அந்த மாணவரை வெட்டுவதற்காக கத்தியுடன் வந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்ததுள்ளது. மேற்கண்ட இரண்டு சம்பவங்களும் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
– லோகேஸ்வரி.வெ