அரசு பள்ளியில் தொடர் அட்டுழியம்..!! பெற்றோர்கள் வைத்த கோரிக்கை..!!
விடுமுறை நாட்களில் அரசு பள்ளி வளாகத்திற்க்குள் புகுந்து அட்டகாசம் செய்த மர்ம நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை.
திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி நகராட்சிக்கு உட்பட்ட ராக்கியாபாளையம் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 10ம் வரை உள்ள இப்பள்ளியில் ராக்கியாபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சுமார் 450-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் வழக்கம்போல் திறக்கப்பட்டது. அங்கே பள்ளியின் நுழைவு வாயிலில் சலூன் கடையில் வெட்டிய தலைமுடி கீழே சிதறிய படியும்., ஆங்காங்கே முடி கொட்டபட்டுள்ளதை கண்டு பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..
மேலும் உள்ளே சென்று பார்த்த பொழுது அங்கு பள்ளி தலைமை ஆசிரியர் கதவில் பள்ளி மாணவிகளுக்கு அரசு சார்பில் வழங்கப்படுகின்ற இலவச காலணியை தொங்கவிடப்பட்டிருந்தது. அதே போன்று அருகில் உள்ள ஆசிரியர்கள் அறை முன்பாக சலூன் கடையில் உள்ள வெட்டப்பட்ட முடிகள் ஆங்காங்கே வீசி சென்றுள்ளனர்.
மேலும் ஆண்கள் கழிவறையில் உள்ள இரண்டு கதவுகளை சேதப்படுத்தியும் கழிவறையை கான்கிரீட் செங்கற்கள் கொண்டு உடைத்தும், குடிநீர் குழாயை உடைத்தும், அங்குள்ள ஒரு வகுப்பறையின் கதவு பூட்டை உடைத்து திறந்து, மாணவர்களின் மேசைக்கு அடியில் வைத்திருந்த புத்தகங்கள், நோட்டுகளை வகுப்பறைக்குள் ஆங்காங்கே தூக்கி வீசி எறிந்துள்ளனர்.
மேலும் அதே வகுப்பில் உள்ள மின்விசிறியினை சேதம் செய்தும், இறக்கைகளை வளைத்து சேதப்படுத்தியுள்ளனர். மேலும் அருகில் இருந்த தொடக்கப் பள்ளியின் மேற்கூறையில் கற்களை வீசி ஓடுகளை உடைத்தும் வைத்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உடனடியாக திருமுருகன் பூண்டி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
மேலும் அரசு பள்ளிகளில் இதுபோன்று அத்துமீறி நுழையும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை வைத்தனர். மேலும் இதுபோன்று சம்பவங்கள் நிகழாமல் இருக்கும் வண்ணம் பள்ளி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் போதிய பாதுகாப்பினை தர தமிழக அரசுக்கும், பள்ளிக் கல்வித் துறைக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.