“தொகுதி மறுசீரமைப்பை 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும்..” தீர்மானம் நிறைவேற்றம்..!!
சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா நட்சத்திர ஓட்டலில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம், இன்று நடைபெற்றது.
இதில் கேரளா, தெலங்கானா, பஞ்சாப் முதல்வர்கள் உட்பட 20க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். ஒன்றிய அரசு 2026ம் ஆண்டில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை மறுசீரமைப்பு செய்ய உள்ளது. அதன்படி, புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட உள்ளதால் தென்னிந்தியாவின் தலைக்கு மேல் கத்தி தொங்கி கொண்டு இருக்கும் சூழல் என்பது தான் தற்போது நிகழ்கிறது. குறிப்பாக, தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட தென்மாநிலங்களின் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை குறைவதற்கு அதிகப்படியான வாய்ப்புள்ளது.
அப்போது உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு மாநிலங்களில் இருந்து நாம் ஒன்றுகூடிஇருக்கிறோம். நமது நாட்டிலுள்ள ஒவ்வொரு மாநிலமும், ஒவ்வொரு வகையில் தனித்தன்மை கொண்டது! பல்வேறு மொழிகள் இனங்கள் – வழிபாட்டு நம்பிக்கைகள் – பண்பாடுகள் – உடைகள் – உணவுகள் – பழக்க வழக்கங்கள் கொண்டதுதான் இந்தியா.
இத்தகைய மாநிலங்கள் சுயாட்சித் தன்மையுடன் செயல்பட்டால்தான் – இந்தியாவில் உண்மையான கூட்டாட்சி உருவாக முடியும்! சிறந்த வளர்ச்சியை அடைய முடியும்!அனைத்துத் தரப்பு மக்களும் போராடியதால்தான், நமது நாட்டிற்கு விடுதலை கிடைத்தது!இதனை உணர்ந்துதான், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்த மேதைகள், இந்தியாவைக் கூட்டாட்சி கொண்ட ஒன்றியமாக கட்டமைத்தார்கள்.
பல்வேறு காலக்கட்டங்களில் இந்த கூட்டாட்சித் தன்மைக்கு சோதனை வந்தாலும் அதனை ஜனநாயக அமைப்புகள் – இயக்கங்கள் தடுத்து வந்துள்ளன. அத்தகைய சோதனையும் ஆபத்தும்தான் இப்போதும் வந்துள்ளது. இதனை உணர்ந்துதான் நாம் அனைவரும் கூடியிருக்கிறோம்.
என்னைப் பொறுத்தவரையில், இந்தியக் கூட்டாட்சியைக் காக்கும் வரலாற்றில் மிகமிக முக்கியமான நாளாக இந்தநாள் அமையப் போகிறது.தொகுதி மறுசீரமைப்பை பற்றி நான் உங்களுக்கு அதிகமாக விளக்க வேண்டிய அவசியமில்லை.வரவிருக்கின்ற – அல்லது எதிர்காலத்தில் நடைபெறுகின்ற சென்சஸ் அடிப்படையில் மேற்கொள்ளவிருக்கும், மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பு என்பது, நம்மைப் போன்ற மாநிலங்களை வெகுவாக பாதிக்கப் போகிறது.
மக்கள்தொகையை பல்வேறு சமூகநலத் திட்டங்கள் மூலமாகக் கட்டுப்படுத்திய நம்மைப் போன்ற மாநிலங்கள், அதன் காரணமாக நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையில் நமது பிரதிநிதித்துவத்தை அதிகம் இழக்க நேரிடும். எனவேதான் இதனை நாம் கடுமையாக – ஆணித்தரமாக எதிர்க்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம்.
“தற்போதையமக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பை ஏற்றுக்கொள்ள முடியாது” என்பதில் நாம் அனைவரும் உறுதியாக இருக்க வேண்டும். இங்கே இருக்கும் ஒவ்வொரு மாநிலமும், மக்கள்தொகை கட்டுப்பாட்டின் மூலம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காட்டியுள்ளன.இத்தகைய மாநிலங்களைத் தண்டிப்பதாக இந்த நடவடிக்கை இருக்கப் போகிறது.மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கை குறைவதன் மூலமாக நமது எண்ணங்களைச் சொல்வதற்கான வலிமை குறைகிறது.
இரண்டு ஆண்டு காலமாக மணிப்பூர் மாநிலம் பற்றி எரிகிறது. ஆனால் நீதிக்கான அவர்களின் குரல்கள் புறக்கணிக்கப்படுகின்றன. ஏனென்றால் நாட்டின் கவனத்தை ஈர்க்க அவர்களுக்கு அரசியல் வலிமை இல்லை. எனவே, நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை குறைவது அல்லது நமது பிரதிநிதித்துவம் குறைவது என்பதை நம்முடைய அரசியல் வலிமையை குறைப்பதாகத்தான் பார்க்க வேண்டும்.
இது வெறும் எண்ணிக்கையைப் பற்றியது மட்டுமல்ல – இது நமது அதிகாரம், நமது உரிமைகள் மற்றும் நமது எதிர்காலத்தின் நலன்களைப் பற்றியது. பிரதிநிதித்துவம் குறைந்து வருவதால், நமது மாநிலங்கள் நமக்குத் தேவையான நிதியைப் பெறுவதற்குகூட போராட வேண்டி வரும்.நமது விருப்பம் இல்லாமல் நமக்கான சட்டங்கள் வடிவமைக்கப்படும்.
நமது மக்களைப் பாதிக்கும் முடிவுகள், நம்மை அறியாதவர்களால் எடுக்கப்படும்.பெண்கள் அதிகாரம் அடைவதில் பின்னடைவுகளைச் சந்திப்பார்கள். மாணவர்கள் முக்கிய வாய்ப்புகளை இழப்பார்கள். உழவர்கள் ஆதரவின்றி பின்தங்குவார்கள். நமது பண்பாடு, அடையாளம் மற்றும் முன்னேற்றம் ஆபத்தை சந்திக்கும். காலம் காலமாக நாம் போற்றிப் பாதுகாத்து வரும் சமூகநீதி பாதிக்கப்படும்.
குறிப்பாக பட்டியலின, பழங்குடி மக்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைக்க அனுமதித்தாலோ அல்லது நமதுமாநில பிரதிநிதித்துவத்தை குறைக்க அனுமதித்தாலோ, நம் சொந்த நாட்டில் நாமே அரசியல் அதிகாரம் இழந்த குடிமக்களாக மாறும் அபாயம் உள்ளது. எனவேதான், தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தைச் சாதாரணமாகக் கருதக் கூடாது
ஜனநாயகப் பிரதிநிதித்துவத்தை வலுப்படுத்தும் எந்தவொரு நடவடிக்கையையும் நாம் எதிர்க்கவில்லை. ஆனால் அந்த நடவடிக்கையானது, நியாயமான அரசியல் பிரதிநிதித்துவத்தை பாதிக்கக்கூடாது என்றுதான் சொல்கிறோம். இந்தப் போராட்டம் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரானது அல்ல; இந்தப் போராட்டம் நியாயமான தொகுதி மறுசீரமைப்பை வலியுறுத்துகிறது என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். இதனை உணர்ந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தை நான் கூட்டினேன் என இவ்வாறே அவர் பேசினார்.
மக்கள் தொகையின் அடிப்படையில் மக்களவைத் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டால், தென் மாநிலங்கள் 100 தொகுதிகளை இழக்க நேரிடும். தென்னிந்திய மக்கள் இதனை ஏற்பார்களா?” என்று கேட்டார் பிரதமர். இதனடிப்படையில் பார்த்தால், தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்பதை அவரே ஒப்புக் கொண்டுள்ளார் என்பதை உணரலாம்.எப்போதும் மாநிலங்களை, மாநில உரிமைகளைப் பறிக்கிற கட்சியாக பா.ஜ.க. இருந்துள்ளது.
இதனை எந்த மாநிலமும் அனுமதிக்கக் கூடாது.இந்த அச்சுறுத்தலை உணர்ந்து, முன்னெப்போதும் இல்லாத ஒற்றுமையுடன் தமிழ்நாடு செயல்பட்டு வருகிறது.இதேபோன்ற ஒற்றுமையை இந்த அரங்கிலுள்ள அனைத்து மாநிலங்களும் காட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்தக் கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்து உரையாற்றினார். அதன் பின்னர் தொகுதி மறுசீரமைப்பை 30 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.